03 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 48 உயரம்

'ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கீங்களா ஜேகே' என்று கேட்டதற்கு, 'ஜவுளிக்கடை எப்படி நல்லா போகுதா' என்று ஜெயகாந்தன் நக்கலாகத் திருப்பிக் கேட்டதிலிருந்து, 'அவங்க கடைல தீபாவளிக்குத் துணி எடுத்திருக்கோம். ஆனா கட ஓனர், இவ்ளோ பெரிய எழுத்தாளர்னு தெரியாது' என்று, ஞாநி வீட்டில் பிரசாதம் தொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு சொன்ன அந்தப் பக்கத்துக்காரனான பாலா சிங் வரை, பலர் மூலமாகவும் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி ஜவுளிக்கடை வைத்திருப்பவர் என்பது தெரியவந்திருந்தது. கடைப் பெயரைக்கூட கேள்விப்பட்டது போலத்தான் இருந்தது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நாகர்கோவிலிலேயே அதுதான் பெரிய ஜவுளிக்கடை என்று சமயவேலோ திலீப்போ யாரோ சொல்லி நினைவில் பதிந்திருந்தது. 

கடையின் பெயர் தெரியாமல் என்னவென்று சொல்லிக் கேட்பது என்று யோசனையாக இருந்தது.

இந்த ஊர்ல பெரிய துணிக்கடை எது என்றுபழகியவரிடம் கேட்பதைப்போல எதிரில் வந்தவரிடம் கேட்டான். அவனுக்கே அது அசட்டுத்தனமாகப் பட்டது.

காவி கட்டிக்கொண்டிருப்பவனுக்கு துணிக்கடையைப் பற்றி என்ன விசாரம் என்று நினைத்தாரோ என்னவோஅவனை ஏற இறங்கப் பார்த்தவர், பரபரவென்று ஏதோ சொல்லிவிட்டுப்போனார். பார்க்கத் தமிழ் ஆள்போல் இருப்பவர் ஏன் மலையாளத்தில் பேசுகிறார் என தோன்றிற்று. அவர் சொன்ன வாக்கியத்தில் மணிக்கூண்டு என்கிற வார்த்தை மட்டும்தான் புரிந்தது.  

ஆபீஸ் அத்தியாயம் 48 உயரம்