12 September 2010

எறும்பின் ரத்தம்

பீரங்கிகள் முன்னேறிக் கொண்டிருந்தன

எதிர்ப்பாய்
பொடியர்களின்
கல் எறி

காலடித் தடம் பதிப்பதற்கு
காததூரம் முன்பாக
கல் ரோஜாக்கள்
விழுந்து சிதறின.

கல் விழுந்தெழுந்த புழுதியில்
கண் கரித்ததெனினும்
கருமமே கண்ணாக
முன்னேறிக்கொண்டு இருந்தது
பீரங்கி

ஊரும் எறும்பு
ஒதுங்க இடமின்றி
திகைத்தது

நில்
என் உயிருக்கு
உத்திரவாதம் சொல் என்றது

யுத்தபூமியில் இருந்ததே குற்றம்

விழுந்த கல்லின்
சில்லொன்று தெரிக்க
இரும்புக் கவசம் க்னங்கென
ஒலியெழுப்பிற்று

நிறுத்து இன்றேல் நிர்மூலமாகு

கண்சிவந்து கனன்ற
பீரங்கி முன்னேறிற்று

எறும்பின் ரத்தம் உறைந்தது இரும்பில்


******************************************
நடந்தது பாலஸ்தீனதில் நமக்கென்ன போச்சு