03 September 2012

நகராட்சி அலுவலகத்திற்குப் போகிறார் தொட்ட மன்னா ராவ்

நமஸ்காரா பாவா. சந்நாகி இத்திரா? 

சந்நாகி இத்தனெ. நிமிக ஏன் பிராப்ளம்? உமா ஹேளித்ளு. 

இல்ல பாவா வருணி பர்த் சர்ட்டிஃபிகேட்னல்லி அவுரு ஹெசுரமத்தரவே இதெ. நன்ன ஹெசுரு இல்லா. அம்மன ஹெசுரு கண்டித்தா பேக்குந்தெ. அது இத்தரெதான பாஸ்பொர்ட் சிக்காதுந்த.

சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?


இல்லை. பாஸ்போர்ட் அலுவலகத்தில் உங்களுக்கு யாரையாவது தெரியுமா... என்றுதான்... 

பிறப்புச் சான்றிதழ் வாங்குவது சாதாரண காரியம் ஆயிற்றே. இப்போது ஆன்லைனிலேயெ வந்தாயிற்றே. பாஸ்போர்ட் வாங்க பிறப்புச் சான்றிதழில் தாய் தந்தை பெயர் இருக்க வேண்டும் என்பது சட்டப்படி முன்நிபந்தனை எனில் அதன்படிக் கொடுப்பதுதானே முறை. விடுபட்டுப்போன உங்கள் பெயரை இணைத்து புதிய சான்றிதழ் வாங்குவது என்ன மலையைப் புரட்டுகிற காரியமா? 

ஐயோ அதை ஏன் கேட்கிறீர்கள். கடந்த ஆறுமாத காலமாக நானும் வருணியும் என் தங்கையுமாக அலையாய் அலைந்து கொண்டிருக்கிறோம். புழுதிவாக்கத்தில்தான் சான்றிதழ் வழங்கும் அலுவலகம். அங்கே போய் கேட்டதற்கு ஆரம்பத்தில் இப்போது வா அப்புறம் வா என்று அலைக்கழித்துக் கொண்டிருதார்கள். இவ்வளவு நாளாய் அலைகிறோமே என்று அழாத குறையாய் கெஞ்சியபின், உங்கள் மகள் 1990ல் பிறந்தவரா? அந்த ஆவணங்கள் எல்லாம் இப்போது எங்களிடம் இல்லை. விரிவாக்கத்தின்போது அவற்றை ஆலந்தூருக்கு அனுப்பிவிட்டோம். அசல் சான்றிதழ் வழங்கியமைக்கான ஆதார ஆவணங்களை நேரில் பார்த்து அதன் அடிப்படையில்தான் திருத்தி புதிய சான்றிதழ் வழங்க முடியும் என்றார்கள். சரி என்று ஆலந்தூர் அலுவலகத்திற்குப்போய் கேட்டோம். புழுதிவாக்கம் அலுவலகத்தில் இருந்து யாரேனும் ஒருவர் நேரில் வந்தால்தான் ஆவனத்தை வழங்கமுடியும். உங்களிடமெல்லாம் கொடுக்க முடியுமா அரசாங்க ஆவணம் ஆயிற்றே என்றார் ஆலந்தூர் அதிகாரி. இது நடந்தது காலையில். அங்கிருந்து உடனே புழுதிவாக்கம் ஓடோடி வந்து ஆலந்தூருக்கு யாரையாவது அனுப்புங்கள். உங்களது ஆள் கையில்தான் கொடுப்பார்களாம் என்று சொன்னோம். இங்கே ஆள் தேள் எல்லாம் கிடையாது. ஆலந்தூர் அலுவலகத்திலிருந்தே ஆள் மூலம் ஆவணத்தை அனுப்பச் சொல்லுங்கள். அசல் ஆவணத்தைப் பார்த்துவிட்டுத்தான் சான்றிதழ் வழங்குவோம் என்றார்கள். சரி என்று மதியம் திரும்ப ஆலந்தூர் போய் விஷயத்தைக் கூறினால், என்னது உங்கள் மகள் பிறந்ந்தது 1990ஆ காலையில் நீங்கள் 91 என்றல்லவா சொன்னீர்கள். 1990ல் பிறந்தவர்களின் மூல ஆவணங்கள் எதுவும் இங்கே இல்லை. 91க்கு முந்தியவற்றையெல்லாம் எந்த காலத்திலோ வேளச்சேரிக்கு அனுப்பியாயிற்று என்றார்கள். சரி என்று வேளச்சேரிக்குப் போனால் சரியான பதிலே இல்லை. சரியான பதில் இல்லை என்றால்? அவரைப் பார் இவரைப் பார் என்று அலைக்கழிக்கிறார்கள். அங்கே இருக்கிறதாமா இல்லையாமா? ஒன்றுமே சொல்லவில்லை. எதாவது செலவாகும் என்றால்கூடப் பரவாயில்லை தருகிறோம் என்றுகூட சொல்லிப் பார்த்தாயிற்று. 

ஆறுமாதமாய் அலைகிறீர்கள் முன்னமே என்னிடம் சொல்லி இருக்கலாமே. சரி போக... 

இல்லையில்லை நீங்கள் மத்திய அரசில் அல்லவா இருக்கிறீர்கள். இது மாநில அரசாங்கம் ஆயிற்றே என்றுதான்... 

மத்திய அரசு என்றால் ஆங்கிலத்தில் ஆரம்பித்து தமிழுக்கு வரவேண்டும். மாநில அரசு என்றால் தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்திற்குத் தாவ வேண்டும். அது கிடக்கட்டும். புழுதிவாக்கத்தில் நீங்கள் விண்ணப்பித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரத்தை ஒரு நகல் எடுத்துக்கொண்டு... 

அக்னாலெட்ஜ்மெண்ட் என்று எதுவும் அவர்கள் கொடுக்கவில்லையே. 

என்னது ஆறுமாதம் முன்னால் கொடுத்த கடிதத்திற்கு அக்னாலெட்ஜ்மெண்ட் இல்லையா? நீங்கள் கேட்டீர்களா? இல்லையா? 

இ ல் லை... 

அரசு அலுவலகம் என்றில்லை, எவருடனாக இருந்தாலும் நாம் ஒரு காரியத்தில் இறங்கப்போகிறோம் என்றாலே எழுத்தில் வைத்துக்கொள்வதுதான் சரி. செய்யப்போவது சட்டரீதியான காரியம்தானே, அப்புறம் என்ன தயக்கம். அரசு அலுவலகத்தின் படியேறும் போதே அசலும் நகலுமாய் இரண்டு கடிதங்கள் இல்லாமல் ஏறுவது அத்தியாவசியம். அலுவலரிடம் கடிதத்தைக்கொடுத்துவிட்டு அவர் படித்து முடித்ததும் அப்புறம் வரச் சொல்லுவார். சரி சார் என்றபடி கடித நகலை நீட்டி ஆதாரக் கையொப்பத்தைக் கேளுங்கள்.

அதெல்லாம் இங்கே போடுவதில்லை.

எங்கே போடுவார்கள்?

இந்த அலுவலகத்தில் இருக்கும் வேலைக்கு இதெல்லாம் போட்டுக்கொண்டிருக்க முடியாது.

பரவாயில்லை. கடிதத்தைப் பெற்றுக்கொண்டமைக்கான ஆதார கையொப்பத்தைப் போட முடியாது என்றாவது போட்டுக்கொடுங்கள்.

தலைக்குமேல் கிடக்கும் வேலைக்கு இதெல்லாம் செய்துகொண்டிருக்க முடியாது. வேண்டுமென்றால் அந்த அறையிலிருக்கும் மேலதிகாரியிடம் வேண்டுமானால் போய் புகார் செய்துகொள்ளுங்கள்.

புகார் எல்லாம் எதற்கு. எனக்கு வேண்டியது, கடிதத்தைப் பெற்றுக்கொண்டமைக்கான அலுவலக முத்திரையுடனான சிறு ஒப்பம். உங்களைத் தொந்திரவு செய்யவில்லை. நீங்கள் கோபப்படவேண்டாம் அவரிடமே கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

கடிதத்தை வாங்கிப் படித்த அதிகாரி அதன் மேல் மூலையில் ஏதும் எழுதி கையொப்பமிட்டாலும் இடாமல் சரி பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னாலும் சரி. உங்களிடமுள்ள நகலை நீட்டிக் கையொப்பம் கேளுங்கள். அவர் அலுவலகத்தைக் காட்டினால் அவர்கள்தான் உங்களைக் காட்டினார்கள் என்று கூறுங்கள். மனதிற்குள் திட்டிக்கொண்டேனும் நான் சொல்கிறேன் என்று கூறி அனுப்பி வைப்பார். என்ன ஆனாலும் சரி நகலில் கையொப்பமின்றி அலுவலகத்தை விட்டு நகராதீர்கள். ஒருவேளை எவ்வளவு கேட்டும் கடிதம் பெற்றுக்கொண்டமைக்கான சான்று கிடைக்காவிடில் பதற்றப்ட வேண்டாம். நேராக அருகிலிருக்கும் அஞ்சல் அலுவலகத்திற்குப் போங்கள். உங்களிடமிருக்கும் நகலை அசலாக பாவித்து அதன் கீழ்ப்புறத்தில், இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டமைக்கான முத்திரைச்சான்றை வழங்க அலுவலகத்தின் முதன்மை அதிகாரி உட்பட அனைவரும் மறுத்துவிட்டனர். எனவே இது இத்துனை ரூபாய் செலவில் பதிவு தபாலில் அனுப்பப்படுகிறது. இந்தக் கடிதத்தில் வேண்டப்பட்டுள்ள காரியத்தை முடித்துத் தருவதோடு இந்த தபாலுக்கான் அநாவசிய செலவையும் அலுவலகம் திருப்பித்தர கடைமைப்பட்டுள்ளது என்று எழுதி உங்கள் கையொப்பமிட்டு, நகல்: குறை தீர்க்கும் குழுமம் முதலமைச்சர் அலுவலகம் என்றெழுதி அதை ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு  கடிதத்தை அந்த அலுவலக முகவரிக்கு Registered Post with Acknowledgment dueவில் அனுப்பி வையுங்கள். மூன்று நான்கு நாட்களிலேயே பெற்றுக்கொண்டமைக்கான அட்டை உங்கள் கைக்கு வந்துவிடும்.

பொதுவாக, எந்த அரசு அலுவலகத்திலும், வந்த கடிதத்தை, மனுவை, விண்ணப்பத்தைப் பரிசீலிக்க 15 நாட்கள் அவகாசம் உண்டு. 15 நாட்கள் முடிந்தபின் திரும்ப அந்த அலுவலகத்திற்குப்போய்ப் பாருங்கள். அலுவலகமே தூக்கில் தொங்கிகொண்டிருக்கும் என்று சொல்ல வரவில்லை. ஆனால் உங்களுக்குத் தரப்படும் மரியாதையே வேறுவிதமாக இருக்கும்.

பொதுவாக அனைத்து மனிதர்களையும் ஆட்டிப்படைக்கும் ஆசையும் பயமுமே அரசு அலுவலகத்திலும் செயல்படுகிறது.  காசும் வேண்டும் பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பது பொது அம்சம். குறைந்தபட்ச தண்டனையாக இடமாற்றத்தை ‘தண்ணியில்லாத காடு’ போஸ்டிங்கைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்தம். அனாவசியமாக ’ஒருவரிடம்’ பிரச்சனை பண்ணிக்கொண்டு குறைந்தபட்சம் ஒரு வருடத்து காசை இழக்க எவர்தான் தயாராய் இருப்பார்கள்?

துரதிருஷ்டவசமாய் இப்போதும் உங்கள் காரியம் முடிந்தபாடில்லை என்றால் சோர்வடைய வேண்டாம். இரண்டாவது பதிவுத் தபாலில் நகல்: முதலமைச்சருக்கு மட்டுமின்றி ஊழல் தடுப்புப் பிரிவுக்குமாக போட்டு அசலை அலுவலகத்திற்கும் நகலை அவரவர்க்கும் அனுப்பி வையுங்கள்.


ஒருமாதம் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லையா. இணையத்தில் தேடினாலே எந்த அரசு அலுவலகத்திற்கும் தகவல் அறியும் சட்டத்திற்கான தொடர்பு அதிகாரியின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கும். அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டம். அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்திற்குப்போய் உங்கள் கடிதத்திற்கு என்ன நடந்திருக்கிறது என்று கேளுங்கள். மழுப்பலாக பதில் வந்தால், தகவல் அறியும் சட்டதின் கீழ் தொடர்பு அதிகாரியின் பெயர் அந்த அலுவலகத்தில் குறிக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இருந்தாலும் இல்லாவிடினும் தகவலறியும் விண்னப்பத்தை யாரிடம் சேர்க்க வேண்டும் என்று அந்த அலுவலகத்தின் முதன்மை அதிகாரியைக் கேளுங்கள். அநேகமாக உங்கள் காரியம் நடப்பதற்கான முகூர்த்தம் இதுவாகவே இருக்கும். குளிபானம்கூட வரக்கூடும்.

இப்போதும் எதுவும் நடக்கவில்லை என்றால், தபால் அலுவலகம் போய் 10ரூபாய்க்கு போஸ்டல் ஆர்டர் வாங்கி ஒரு வெள்ளைத்தாளில் பிறப்புச் சான்றிதழுக்கான மூல ஆதார ஆவணத்தின் அதிகாரபூர்வ நகலைக் கேட்டு தகவலறியும் சட்டத்தின்கீழ் விண்ணப்பியுங்கள். அநேகமாக எந்த அலுவலகத்தில் இருக்கிறதோ அந்த அலுவலகத்திற்கு உங்கள் விண்ணப்பம் தானாகவே செல்லும். நீங்கள் அலைய வேண்டாம். நீங்கள் போய் கால்கடுக்க நிற்காமலேயே உங்களுக்குத் தேவையான  சான்றிதழ் ஆதாரம் உங்களை வந்தடையும். அப்படியும் நடக்கவில்லை எனில் ஒருமாத கால அவகாசத்தில்  அந்தத் துறையின் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யுங்கள். அநேகமாக இதற்குள்ளாகவே உங்கள் காரியம் நிகழ்ந்திருக்கும். அடுத்த மாதத்திலும் ஏதும் நடக்கவில்லை எனில் முதன்மை தகவல் அதிகாரியிடம் முறையீடு செய்யவேண்டும். இதற்காக மத்திய அரசு அலுவலகம் தொடர்புடையதாக இருந்தால்கூட  டெல்லி செல்ல வேண்டுமே என்கிற கவலைகூட இல்லை. இப்போது வீடியோ கான்ஃப்ரென்சிங் வசதிகூட வந்துவிட்டது.

ஏன் பாவா இதெல்லாம் எங்களால் முடிகிற காரியமா?

உங்களிடம் ஏதும் மோசடி இருக்கிறதா? இருக்கிறது என்றால் இந்த மோதலில் இறங்க முடியாது. சட்டத்திற்குப்புறம்பான காரியம் ஏதேனும் செய்து அதை மூடிமறைக்க வேண்டிய அவசியம் ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அரசு அலுவலரை மட்டும் குற்றம் சொல்லுவது சரியா?

ஐயோ பாவா நாங்கள் என்ன மோசடி செய்யச்சொல்லிக் கேட்கிறோம்?

உங்களை என்றால் உங்களை அல்ல பொதுவாகச் சொல்கிறேன். பிறப்புச் சான்றிதழில் உங்கள் பெயர் நிரப்பப்படாமல் விடுபட்டுப்போனது எப்படி உங்கள் தவறாகும்? மருத்துவமனையோ அல்லது சான்றிதழ் அலுவலகத்திலோதான் விடுபடல் நடந்திருக்கவேண்டும்.

ஹவ்து

சரி நானே கரகண்டோத்தனெ. நாள பெளிக ஹத்து கெண்டைக வருணின வேளச்சேரி விஜயநகரம் பஸ்டேண்டிக பர்லக்க ஹேளி நானு வெயிட் மாடத்தனே