27 September 2013

ரஸவாத லிங்கமும் குறியீட்டின் நுனியும்

புறப்பாடு II – 1, லிங்கம் September 20, 2013

ஜெயமோகனின் தமிழில் முனை என்கிற சொல்லே இல்லை போலும். இல்லாவிட்டால் எது முனை எது நுனி என்கிற பேதமின்றி எதற்கெடுத்தாலும்  நுனி என்று எழுதுவாரா?

மரமானாலும் நுனி. குறியானாலும் நுனி, விழியானாலும் நுனி.

<இடிவிழுந்து அதன் மேல்நுனி கருகி மொண்ணையாகிருந்தது.> மொட்டைத்தென்னையின் கீழ் நுனி என்னாச்சோ!

<அவன் தன் குறியை இழுத்து மேலே கொண்டுவந்து அதன் நுனி அங்கே தெரியும்படி கட்டியிருந்தான்>
பட்டாளக் கனவுகாணத் தகுதியான நல்ல நீளமான பையன்தான்

<கண்களின் நுனி இந்த அளவுக்கு கூர்மையாகவா இருக்கும்>

அதற்கு முந்தைய வரியில்

<அப்பால் தையல் எந்திரத்தில் தைத்துக்கொண்டிருந்த தேவகியக்கா ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தாள்.>

கண்களின் நுனி தெரிய இரண்டு ஓரக்கண்களாலும் இப்படி ஒருக்கா அப்படி ஒருக்கா என்றல்லவா தேவகியக்கா ஜெயமோகனைப் பார்த்திருக்க வேண்டும்?

மாஷேதான் தமிழின் மாஷ்டர் ரைட்டர்.

இந்த லட்சணத்தில் என்னைவிட தமிழ் எழுதத் தெரிந்தவர் எவருமில்லை என்று பீத்தல் வேறு.

வாழும் இலக்கியத்தின் நுனிதான் இப்படி சரி அடி எப்படியோ?

<நாகக்கோடு தாண்டுவதற்குள் ராதாகிருஷ்ணன் மெல்ல அடங்க ஆரம்பித்திருந்தான்.>

அவனை வெள்ளையாடை அணிந்த கரிய மனிதர்கள் இருவர் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் <திறமையாக அள்ளி உருட்டி அதில் ஏற்றி இலகுவாக தூக்கிக்கொண்டு சென்றனர்.>

அவனை மார்பளவு உயரமான ஒரு தகரக்கட்டிலில் படுக்கசெய்தனர். <அவன் கை கீழே சரிந்து தொங்கி ஆடியது. அதை மெலிந்த கழுத்துள்ள ஒல்லியான நர்ஸ் எடுத்து அவன் மார்பின் மீது வைத்தாள்.>

<போயி பதினஞ்சு நிமிசமிருக்கும்>

செல்வின் பெருவட்டருடன் பேசியபடி வெளியே சென்றார். நர்ஸ் அவருடன் செல்ல <ராதாகிருஷ்ணன் தனியாக கட்டிலில் அசைவில்லாமல் கிடந்தான்.>
ஸ்டிரெச்சர் தூக்கிய கரிய மனிதர் வந்து கையில் இருந்த

<வெண்ணிறமான பெரிய போர்வையை அவன் மேல் விரித்து முகத்தையும் உடலையும் முழுமையாக மூடினார்>

<அவனுடைய உடலின் நடுவே ஆண்குறி விரைத்து எழுந்து நிற்க அதன்மேல் வெண்போர்வை கூடாரமாக பரவியிருந்தது>

குஜாலாக இருந்த பையன் இறந்து போனபின் குறி விரைப்பதாய் எழுதுவது கவித்துவக் குறியீடு எனில் எவர் வக்கிரத்தின் என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது. மனித மனதின் வக்கிரத்தை எழுத இலக்கியத்தில் தடையில்லை என்பத்ற்காக, இப்படி முத்தாய்ப்புக்காக வக்கிரமாக எழுதுவதை சர்ரியலிஸ எழுத்தாக காமலோகம்.காமில் அல்லவா சேர்க்க வேண்டும்?

சுவாரசியமாய் எழுதுவதையும் சுவாரசியத்துக்காக எழுதுவதையும் வேறுபடுத்திப் பார்க்க இலக்கியத்திலும் சரி இணையத்திலும் சரி, இன்று எத்துனைப் பேரால் முடிகிறது? இங்கே தி.ஜாவின் சுவாரசியத்துக்கும் சுஜாதாவின் சுவாரசியத்துக்கும் ஒரே மதிப்பீடுதான். அப்படியே தப்பித்தவறி வேறுபடுத்திப் பார்க்க முடிந்தவர்களையும் வாய்மூட வைக்க இருக்கவே இருக்கின்றன எதிர்காலத்தின் குச்சி ’நுனி’யில் தொங்கிக்கொண்டிருக்கும் விஷ்ணுபுரம் விருதின் லகரங்கள்.