22 March 2011

சார்! ஒரு சத்யஜித் ராய் கதை. படிச்சிப் பாருங்க!

இந்தக் கதையை நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை. உலக சினிமா அரங்கில் நமக்கென்று, அடையாளத்தை உருவாக்கிய தலைசிறந்த இயக்குநராக, ராயை எல்லோருக்கும் தெரியும். பலருக்குத் தெரிந்திருக்காத ஒரு விஷயம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். நமது இயக்குந-எழுத்தாளர்கள் போலல்லாது தனியாகவே இலக்கிய அந்தஸ்துடைய கதைகளின் படைப்பாளி.

80களில் இந்தக் கதை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வந்தபோது (பெங்காலியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்ததும் சித்திரங்களும் அவ ரே) எனது நண்பன் ஷங்கர் ராமன் சொல்லி படித்தது. சமீபத்திய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் முடிந்த பிறகு கவிராஜன், ஷரன்கேயுடன் எல்டாம்ஸ் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். டிவி சீரியலாக சத்யஜித் ராய் ப்ரஸண்ட்ஸ் என்று அவர் மகன் சந்திப் ராய் இயக்கிய Brief shower என்கிற எப்பிஸோட் பற்றி எவ்வளவு நேர்த்தியாக ஒரு சின்ன உறவு ஏற்படுவதை என்னமாய் எடுத்திருப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

அது முதலாகவே ராய் என்னுள் சுழன்று கொண்டே இருந்தார். அந்த எபிஸோட் கிடைக்கா விட்டாலும் ராயின் ஒரு பிரமாதமான கதை படித்திருக்கிறோமே. அது கிடைத்தாலும் பகிரலாமே என கதைத் தலைப்பு நினைவழிந்த வருத்தத்தில் விழைவு மட்டும் உந்த தேடியதில் அந்தக் கதை கிடைத்தது, அதுவும் PDFஆக. 

மிகமிக எளிய ஆங்கிலம். எனக்கே 80களில் புரிந்ததென்றால் ஓடுகிற பூனை கூட, அட என்று நின்று படித்துவிட்டு வரட்டு முறுவல் புரிந்துவிட்டுப் போகும். 4500 வார்த்தைகளைக் கண்டு மிரள வேண்டாம். படிக்கத் தொடங்கினால் கல்கத்தா நகருக்குள் ட்ராமில் ஏறி இறங்கிய பராக்காய் கதை முடிந்துவிடும். 

கிருஷ்ணன் நம்பி அடிக்கடி சொல்லுவார் என சுந்தர ராமசாமி முறுவலித்தபடி அடிக்கடி சொல்லுவார் என நான் அடிக்கடி சொல்கிறேனே - கதை என்னை இழுக்க வேண்டும் நான் அதன் பின்னால் ஓட மாட்டேன் என்று, இதைப் படித்தால் அது என்ன என்று விளங்கும்.

Satyajit Ray Society தளத்திலிருந்தே சேமித்துப் படிக்கலாம். அல்லது என் சேமிப்பில் இருந்தும் படிக்கலாம். http://www.maamallan.com/p/blog-page_12.html

கலைஞனுக்கு நாம் செய்யக் கூடிய ஆகப்பெரிய மரியாதை அவன் படைத்ததைப் பார்ப்பதும் அவன் எழுதியதைப் படிப்பதும்தானே!