18 March 2011

நீ கேளேன்! நீ கேளேன்!

என்னிடம் ஒரு பழக்கம். ஒன்று பிடித்துவிட்டால், எனக்குப் பிடித்தவர்களை ஓட ஓடத் துரத்திப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் அடுத்தவர் மனநிலை பற்றிய எண்ணமே இருக்காது. இது தவறு என்று எல்லோரையும் போல எனக்கும் தெரியும். ஆனால், ஒருவன் மேல் சாமி வந்திருக்கையில் செய்யும் காரியங்களுக்கு அவன் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ளாதது, மாட்டிக் கொண்டவரின் தவறும்கூடத்தான் இல்லையா? ஆனால் இந்த தர்க்கத்தில் இருக்கும் நியாயம், என்னைத் தவிர இந்த உலகில் ஒருவருக்குமே ஏன் புரிவதில்லை.

1985ல் ஒரு மாலையில் ஆஃபீஸ் விட்டபின், வழக்கம் போல சைக்கிளில் பராக்கு பார்த்தபடி ட்ரைவ் இன் போவதற்கு முன் தெருப்பொறுக்கிக் கொண்டிருந்தேன். மெளண்ட் ரோட் எல்.ஐ.சி பக்கத்தில் இருந்த / (இருக்கும்) எஸ்பிஐ நடைபாதைப் புத்தகக் கடையில் ஆங்கிலப் புத்தகம் ஒன்றின் அட்டை, கண்ணைக் கவர்ந்தது. தலைப்பும் ஆர்வத்தைத் தூண்டியது. 

ஆங்கிலப் புத்தகம். அதிலும் தடிமனான புத்தகம். அந்நிய பாஷை, நமக்கு எழுத்துகூட்டிப் படிப்பதே பெரும்பாடு. அப்போது மாதக் கடைசி என்றாலும் வாங்கினேன். ட்ரைவ்-இன் வந்து ஒரு காஃபி வாங்கிக் கொண்டு புத்தகத்தின் முதுகை வலதுகையில் பிடித்துக் கொண்டு இடது கைக் கட்டை விரலால் சீட்டுக் கட்டு போல லேசாக வளைத்து விர்ர்ரினேன். ஆங்கிலப் புத்தகத்தை இப்படிப் படித்தால்தான் விவேகானந்தரை, வாசிப்பு வேகத்தில் நம்மால் விஞ்ச முடியும்.

இருப்பதிலேயே ஆகக் குட்டியாக ஒரு கதை அகப்பட்டது. படிக்கத் தொடங்கினேன். அட புரிகிறதே என ஆர்வமானேன். இங்கிலீஷ் பெயரே பெரிதாகப் புரியாத போது ஜெர்மன் பெயர் புரிந்து என்ன ஆகப் போகிறது? ஆள் பெயர் இடப்பெயர் ஆகியவற்றையெல்லாம் தாண்டித் தாண்டிப் படித்தேன். இதெல்லாம் பாண்டிச்சேரி இஸ்கூலில் கற்றுக் கொடுத்த ஆங்கிலம் பேசுவது எப்படி என்கிற டெக்னிக்தான். 

ஆங்கிலம் பேச என்ன தயக்கம். கூச்சமே படாதே. தலையைச் சொறிந்தபடி ’பென்சில்’ என்றால் அது இங்கிலீஷ் பேசுவதாகத்தானே அர்த்தம். பென்சில் இங்கிலீஷ் வார்த்தைதானே எனத் தன்னம்பிக்கை ஊட்டிய தமிழ்ப் பற்றாள பண்டிச்சேரி ஆங்கில ஆசிரியரை மனதிற்குள் நிறுத்திக் கொண்டேன்.

ராஜாடா நீயி இங்கிலீஷ்தானே தெரியாது இலக்கியம் தெரியுமே! என்று எனக்கு நானே தட்டிக்கொண்டு ஒரு மூட தைரியத்தில் படித்தே முடித்துவிட்டேன். 

பிரமாதம். 

ஒக்காளா ஓழி கதையா எழுதி இருக்கான் என்று கத்த வேண்டும் போல சந்தோஷத்தில் துள்ளியபடி சுற்றிலும் பார்த்தேன். அன்று பார்த்து ட்ரைவ்-இன் ஈயாடியது. தெரிந்த முகம் ஒன்றையும் காணோம். வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அது தன் போக்கில் நேரே சீறிச்சென்றது மயிலை சாந்திவிகார் வளாகம் நொக்கி. அதில்தான் லஸ் லாட்ஜ் இருந்தது. அங்குதான் சுகுமாரன் கோவை மில் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாக ’வைத்தியர்.....அவர்கள் திங்கள் டு புதன் மெட்ராஸ் விஜயம்’ என்பது போலத் தங்கி இருந்தான். 

புத்தகத்தை நீட்டி, ’அட்டையே எப்படி இப்படி’ எனப் புளகித்தேன். ’இதைப் படி’ எனக் கதையைக் கொடுத்தேன். படித்துவிட்டு அவன் முகம் மலர்ந்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். ’எங்கே கிடைத்தது’ எனக் கேட்க, மறுநாள் அதே கடைக்கு அவனை அழைத்துச் சென்றேன். தானும் ஒரு காப்பி வாங்கிக் கொண்டு ஊருக்கும் சென்று விட்டான். 

ஷங்கர் ராமனிடம் படிக்கக் கொடுத்து அவனும் நன்றாக இருக்கிறது என்றான். சில நாட்கள் கழித்து, நாகர்கோவில் ஸ்வாமிகள் மெட்ராஸ்ஸுக்கு விஜயம் புரிந்தார். அபிராமபுரம் தலைமை பீடத்தில் தங்கி இருந்தார். அப்போது நான் கடைநிலை குமாஸ்தாவாக வேலைபார்த்துக் கொண்டிருந்தது எஸ்ஐஇடி பக்கத்தில் இருக்கும் ஆனந்தா ஆஃபீஸ் செண்டரில். மத்தியானம், ’தோ வற்றேன்’ என்று அதிகாரியிடம் டிமிக்கி கொடுத்துவிட்டு ஸ்வாமிகளின் கள்ள தரிசனத்திற்கு ஓடினேன். (மதியம்தான் க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில் இல்லாது, ராமசாமி எனக்கே எனக்காகக் கிடைக்கிற நேரம்)

வாங்கோ - மழித்த பெருமுகம் கதவு திறந்து சிரித்தது.

எப்படி மோப்பம் பிடிச்சேள்?

ஹிஹிஹி மோகன் மூலமா...

ஆஃபீஸ் இல்லியோ?

பர்மிஷன் போட்டுட்டு வந்துருக்கேன். 3.30க்கு ரெஜிஸ்டர் போஸ்ட். தபால் ஏதும் இருந்தா அனுப்பணும். அது வரைக்கும் ஃப்ரீதான்....இதப் படிச்சிப் பாருங்களேன்.

புத்தகத்தைக் கையில் வாங்கி முகப்பையும் தலைப்பையும் பார்த்து முறுவலித்தார். லட்சம் ரூபாய் லாட்டரியில் விழுந்த குஷி கும்மாளியிட்டது.

நல்லாருக்கே!

அட்டையேக் கவிதை மாதிரி இருக்கு இல்லே! 

அவர் கையில் இருந்தபடிக்கே புத்தகம் இருக்க, எக்கி பக்கம் புரட்டி, இந்தக் கதையப் படிச்சிப் பாருங்களேன் என்றேன்.

நீங்க படிச்சுட்டேளா? - வியப்புடன் விசாரிப்பு.

படிச்சுட்டேன். நீங்க கண்டிப்பாப் படிக்கணும். அதுக்குதான் ஓடி வந்தேன். குட்டிதான். இக்கினியூண்டு, ரெண்டே பக்கம்தான். இப்பயேக் கூடப் படிச்சிடலாம். 

தலையணையைச் சுவரில் சாய்த்து, சற்றே சரிந்தபடி, இடதுகால் முக்கோணமாய் உயர்ந்து பாயில் பாதம் பதிக்க, காவி வேஷ்டியை நீவிவிட்டுப் படிக்க ஆரம்பித்தார். நான் நகம் கடிக்கத் தொடங்கினேன். ஏதோ நான் எழுதிய கதையைப் படிக்கக் கொடுத்தது போல ஒரு தவிப்பு.

பெரிய பூசனிக்காய் பிளந்தது போல முகம் விகஸித்தது.

என்னமா எழுதியிருக்கான் இல்லே!

ப்ரில்லியண்ட். ரொம்ப அழகா சொல்லிருக்கான், பொயட்ரி மாதிரி இருக்கு. 

ச்சும்மா ரெண்டு பக்கத்துல எவ்ளோ பெரிய விஷயத்தை ஒரு நாட்டோட ஆன்மவையே என்னமோ கொழந்தைக் கதை மாதிரி சொல்லிட்டான். ஆணிவாங்கப் போற எடம் கெழக்கோ?

அப்படித்தான் இருக்கணும். மாமல்லன் நீங்க இதை ட்ராண்ஸ்லேட் பண்ணலாமே.

ராமசாமி விளையாடரீங்களா? படிக்கவே எழுத்து கூட்டி எண்ணிகிட்டு இருக்கேன்.

இல்ல அந்தக் கதையோட சோலப் புடிச்சிட்டேளே! அதான முக்கியம். 

டைட்டஸ் அங்கிள் ஒரு ஆணிவாங்குவதற்காக வேண்டி.....என்கிற நகரத்திற்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டார். ஹா ஹ் ஹா என்னா நக்கல்....

ட்ரான்ஸ்லேட் பண்ண ஆரம்பிச்சாச்சு போல இருக்கே.

நீங்க வேற.

கூச்சமும் குஷியுமாய் சைக்கிள் தெறிக்க ஆஃபீஸ் வந்து அடைந்தேன். அன்பின் மிகுதியில் நண்பர்கள் உற்சாகப் படுத்துவதையெல்லாம் உண்மையென நம்பிவிடுமளவிற்கு நான் மூட ஜென்மமா என்ன?

கொஞ்ச காலம் கழித்து கொல்லிப் பாவையில் அந்தக் கதை வெளியானது. சுகுமாரன் மொழிபெயர்த்திருந்தான். இப்போது கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு புத்தகத்தில் இருக்கிறது. (ஏ சிறுபத்திரிகைனாலே சண்டைதான்! சண்டை மட்டுமேவா? - கொல்லிப்பாவை)

இன்று வரையிலும் 444 பக்கங்கள் கொண்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகத்தில் நான் படித்திருப்பது இரண்டு பக்கங்களில் இருக்கும் அந்த ஒரு கதை மட்டுமே. அதன் தமிழ் வடிவம் இதோ.
லயோலா என்ற பெரும்பாம்பின் கதை 
 - ஜெர்மன் மொழியில் : பீட்டர் ஹாக்ஸ் 

 - தமிழில் : சுகுமாரன்



அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். புகைவண்டி நிலையத்தில் பயணச் சீட்டுக் கொடுக்குமிடத்தில் பின்வருமாறு அச்சிட்ட வெள்ளைக் காகிதத்தைக் கண்டார்: ‘அன்பான பயணியே! உங்கள் பயணத்தின் போது யாராவது, எப்போதாவது ஒரு பிராணியை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் தயவுசெய்து மறுத்துவிட வேண்டாம். எங்களுக்கு அதைக் கொண்டு வாருங்கள், நன்றி. ஹாலே மிருகக் காட்சி சாலை.’ அங்கிள் டைட்டஸ் அந்த அறிவிப்பைக் கோட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டார். புகை வண்டியேறி ஷீவார்ஸ்வாசர் போய்ச் சேர்ந்தார். ஆணியையும் வாங்கிக் கொண்டார். வீதியொன்றில், கறுப்பு நிறக் கைக்குட்டையைத் தலையில் சுற்றிக்கொண்டிருந்த முதுகு கூன்விழுந்த கிழவி ஒருத்தி அவருக்கு முகமன் கூறினாள்: “தயவுள்ள ஐயா! உங்களுக்குப் பிராணி எதுவும் தேவையாக இருக்கவில்லையா?” என்று கேட்டாள். “வாஸ்தவத்தில் தேவைதான். நீங்கள் ஏன் அதைக் கொடுக்கக் கூடாது?” என்று அங்கிள் டைட்டஸ் கேட்டார். “நகர்ப்புறத்திலுள்ள என்னுடைய பண்ணை வீட்டில் வசிக்கிறது அது. சமீப வருடங்களில் அது மிகவும் பெரிதாகிவிட்டது. ஆகவே அதைக் கொடுத்துவிட விரும்புகிறேன்” என்றாள் கிழவி.



அங்கிள் டைட்டஸ் கிழவியைத் தொடர்ந்து அவளுடைய பண்ணை வீட்டுக்குப் போனார். பறங்கிக் கொடிகளுக்கும், அவரைக் கொடிகளுக்கும் இடையில் சிவப்பும், மஞ்சளும், பழுப்புமான நிறங்கள் கொண்ட உருளை வடிவமான ஒரு வஸ்துவைப் பார்த்தார். வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ அதன் முனைகள் எதுவும் புலப்படவில்லை. ”பாம்பு என்று நினைக்கிறேன்” என்று யூகித்தார் அங்கிள் டைட்டஸ். “ஆமாம், அதன் பெயர் லயோலா” என்றாள் கிழவி. பாம்பின் மீது சுண்ணாம்பால் அம்புக்குறிகள் வரையப்பட்டிருந்தன. அவை வெவ்வேறு திசைகளைச் சுட்டிக் காட்டின. வால் பகுதிக்கு, தலைப்பகுதிக்கு என்று அடையாளச் சீட்டுகளும் இருந்தன. அங்கிள் டைட்டஸ் சொன்னார். “மிகவும் காரியார்த்தமான ஏற்பாடு. அநாவசியமாகச் சுற்றுவதைத் தவிர்க்கிறது.” தலையை நோக்கிச் சுட்டிய அம்புக்குறிகளைத் தொடர்ந்து கணிசமான தூரம் நடந்தபின், தண்டவாள மேட்டுக்கு அருகில் வெயில் காய்ந்தபடி படுத்துக் கிடந்த அதைக் கண்டார். “உன்னை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான்.” அங்கிள் டைட்டஸ் தொடர்ந்தார்: “உனக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உன்னை ஹாலே மிருகக்காட்சி சாலைக்குக் கொடுத்து விடலாம். ஏற்கனவே என்னுடைய குரங்கு கேவார்டு அங்கே வேலை செய்கிறது. எனவே அந்த நிறுவனத்தை நிச்சயமாக உனக்கு சிபாரிசு செய்கிறேன்.” “எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை” என்றது தலை. “என்னுடன் வீட்டுக்கு வந்தால் நல்லது. கேவார்டு நாளை உன்னை மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துப் போகும்,” அங்கிள் டைட்டஸ் சொன்னார். “மிகவும் சந்தோஷம்” என்றது தலை. எனவே, அங்கிள் டைட்டஸ் ஷீவார்ஸ்வாசர்க்குப் போகும் புகைவண்டியைப் பிடித்தார். ஜன்னல் வழியாக, ரயில் பெட்டியை ஒட்டிய மாதிரியே, லயோலா என்ற பெரும் பாம்பின் முழுவடிவமான தலை அபார வேகத்துடன் ஓடிவந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.



அன்றைக்கு, அங்கிள் டைட்டஸ், ஹென்ரியட், கேவார்டு மூவரும் அதே வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் போட்ஷீக்கா தம்பதியினரால் மாலை விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஹென்ரியட்டும், கேவார்டும் ஏற்கனவே மாடியில் இருந்தனர். “அன்புள்ள திருமதி போட்ஷீக்கா! துரதிருஷ்டவசமாக நான் தாமதித்துவிட்டேன். தவிர ஒரு விருந்தாளியையும் அழைத்து வந்திருக்கிறேன்.” என்று அங்கிள் டைட்டஸ், கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் சொன்னார். “ஓ! எனக்கு சந்தோஷமா” என்று என்ஜின் ஃபயர்மேனின் மனைவி சொன்னாள். “வந்திருக்கும் விருந்தாளி ஒரு பாம்பு” என்று அங்கிள் டைட்டஸ் தெரிவித்தார். திருமதி போட்ஷூக்கா, சற்றுப் பயந்த குரலில், “பெரியதா, சின்னதா?” என்று கேட்டாள். “மிகப் பெரியதுதான்” என்று ஒப்புக் கொண்ட அங்கிள் டைட்டஸ், தொடர்ந்து, “ஆனால், முழுவதுமாக உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. அதன் பெரும்பகுதி வெளியிலேயே தங்கி விட முடியும்” என்றார். “நான் காரணத்தைக் கேட்கவில்லை. ஆனால் என்னிடம் போதுமான உணவு இருக்குமா என்று நிச்சயமில்லை” - திருமதி போட்ஷீக்கா சொன்னாள். இதற்கிடையில் லயோலா அறைக்குள் தலையை நீட்டி, மிகுந்த மரியாதையுடன், “தயவு செய்து சிரமப்பட வேண்டாம். நான் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவேன்” என்று தெரிவித்தது. “என்ன பயங்கரமான யோசனை” என்று கத்தினார் ஹென்ரியட். “ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சாப்பிட நேர்ந்தால் நான் பட்டினியால் செத்தே போவேன்.” “முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவன் எவ்வளவு தடவை சாப்பிடுகிறான் என்பதல்ல, என்ன சாப்பிடுகிறான் என்பதுதான்” என்றது லயோலா. “ஆனால், இவ்வளவு பெரியதாக இருப்பதற்கு நீ என்ன சாப்பிடுகிறாய்?” திருமதி போட்ஷீக்கா தெரிந்து கொள்ள விரும்பினாள். “ஊறுகாய்” என்றது பாம்பு. அங்கிள் டைட்டஸ், “அப்படியா? இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது.” என்று கூவினார்.



“சந்தேகமில்லாமல் ஊறுகாய் மட்டுமேயல்ல, என்னுடைய ஆகிருதியை நிர்ணயிப்பது” என்றது பெரும்பாம்பு. “ஒருவகையில் அது என் குடும்பத்திலேயே ஓடுவது. என்னுடைய அசல் மூதாதை ஏதேன் தோட்டத்திலிருந்தது. நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.” “அது போன்ற பாம்பு உண்மையாகவே இருந்ததா என்று நான் எப்போதுமே ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்” என்று ஃபயர்மேன் திருவாளர் போட்ஷூக்க சொன்னார். “முன்னோர்களைப் பொறுத்த வரை நீங்கள் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. சில நிஜமாக இருந்திருக்கின்றன. சில இல்லை. எப்படியிருப்பினும் சொர்க்கத்திலிருந்த பாம்பின் வம்சாவளியில் வந்தது ஒரு ஹைட்ரா, பல தலைகள் கொண்ட பாம்பு. ஹைடிராவிலிருந்து வந்ததுதான் பிரசித்தி பெற்ற ஸாமர்கண்ட் ராட்சஸன். அதிலிருந்து கிரெண்டல் உருவானது. கிரெண்டலிலிருந்து சந்ததியானதுதான் வாஷ்நெஸ்ஸில். இன்றைக்கு வசிக்கிற நீர்ப்பாம்பு. அந்த நீர்ப்பாம்பின் சந்ததியே என் தாய் நூரெம்பர்க் ஃபுர்த்.” “நம்முடைய தெருக்களுக்கடியில் ஓடுகிற நீர்க்குழாய் உனக்கு ஏதாவது உறவா?” என்று கேட்டாள் சிறுமி போட்ஷீக்கா. “அபத்தம்” என்றது லயோலா. “எனக்குத் தெரிந்தவரை நீர்க்குழாய் சுத்தமான தொழில் நுட்ப ரீதியான வடிவம்.”



வெளியே கூடத்தில் தொலைபேசி மணி ஒலித்தது. அங்கிள் டைட்டஸ் எழுந்து போய் ரிசீவரை எடுத்தபோது, ஷீவார்ஸ்வசரில் இருக்கிற கூனல் கிழவியின் குரல் கேட்டது. “கவனி, நீ என் பாம்பை உன்னுடன் கொண்டு போகவில்லை” “நான் எடுத்துக் கொண்டுதானே வந்தேன்” என்று ஆச்சரியத்தில் கத்தினார் அங்கிள் டைட்டஸ். “ஆனால் அது இன்னும் என் தோட்டதில் படுத்துக் கிடக்கிறது” என்றாள் கிழவி. “சாத்தியமே இல்லை. அது இதோ இங்கே அடுத்த அறையில் இருக்கிறது.” அங்கிள் டைட்டஸ் சொன்னார். - ”அது என்னுடைய தோட்டத்தில் இருக்குமானால்....” கிழவி சிடுசிடுத்தாள். “நிச்சயம் உன்னுடைய அறையில் இருக்க முடியாது.” - “மாறாக இருக்கிறதே! ஏனென்றால் அது இங்கே இருக்கும்போது தர்க்கரீதியாகப் பார்த்தால் உன்னிடம் இருக்க முடியாதே” என்றார் அங்கிள் டைட்டஸ். “நான் அதை கிள்ளிவிடப் போகிறேன்” என்று சொன்னாள் ஷீவார்ஸ்வாரிலிருக்கிற கிழவி. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு லயோலா திடீரென்று கத்தியது.  “ஓவ்! ஊத்தைக் கிழவி. கிள்ளி வைக்கிறாள்.” - “என்ன? அவள் அங்கே கிள்ளுகிறாள் என்று நீ இங்கே அலறுகிறாய்?” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். “வாஸ்தவம். என்னுடைய வால் அங்கேயும் தலை இங்கேயும் இருக்கிறது” என்றது பாம்பு. “ஆனால் நான் புகைவண்டியில் வரும்போது என்னைத் தொடர்ந்து நீ ஓடி வந்து கொண்டிருந்தாயே?” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். பாம்பு அவரைத் திருத்தியது: “நான் வெறுமனே என்னைச் சுருளவிழ்த்துக் கொண்டிருந்தேன்.”



“அதுவும் உண்மைதான்.” அங்கிள் டைட்டஸ் முணுமுணுத்துக் கொண்டே ரிசீவரை மெதுவாக வைத்தார். “ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருக்கக்கூடிய ஒரே மிருகம் உலகத்திலேயே லயோலா ஒன்றுதான்.”



நன்றி கொல்லிப்பாவை தொகுப்பு இதழ்


ஆங்கில மொழிபெயர்ப்பு