28 February 2014

இலக்கிய டாவும் ஆன்மீக டாவும்

இது நேற்று எழுதத் தொடங்கியது.

பாலகுமாரனின் ஃபேஸ்புக் பக்கத்தை இன்றுதான் தற்செயலாய் பார்க்க நேர்ந்தது.

மாலை நான்கு மணிக்கு ஆளைத் தூக்க, தோழர்களுடன் தூரப் பார்வைக் கண்காணிப்பில் தொடங்கிய வேலை, புழலில் கொண்டு சேர்த்துவிட்டு, அண்ணா நகர் சரவணபவனில் அவசர அள்ளித் துருத்தலாய் இரவு உணவை முடித்து, அலுவலகம் போய் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து முதுகைச் சாய்த்து இரவு 12.30க்கு ஃபேஸ்புக்கைத் திறந்தால், என் டைம் லைனில், ’அந்த  சங்காமங்கி மட்டும் என் கையில் கிடைத்தால்’ என்று சொல்லாத குறையாய் போன் டார்ச்சர் பற்றிய ஒரு பெண்மணியின் பதிவு. அவர் அளித்திருந்த எண்ணை என்னுடைய ஃபோனிலிருக்கும் அப்ளிகேஷனில் போட்டுப் பார்த்தேன். அந்த எண் குறித்த தகவலெதுவுமில்லை. அதிலிருக்கும் கமெண்டொன்றில் என்னாச்சு *** என்கிறார் அனாதிகாலமாய் அருட்பெருஞ்சோதி, பெண்களிடம் தனிப்பெருங்கருணையாய் வாழும் பாலகுமாரன்.

கெட்டாலும் ஆண்மக்கள் காலம் முதலாகவே, பிராக்கெட் போடவே பிறவியெடுத்த, அந்த மூன்று நாட்களின் யதார்த்த வர்ணனையின் இடைக்கிடையில் வயித்த ரொம்ப வலிக்குதாடா என தலையை வருடிய எழுத்தில் சொட்டிய காருண்யமல்லவா விசிறி நெருப்பாகி ஜொலிக்க வைத்தது.

உரத்த கற்பனையல்ல ஓர் உண்மைச் சம்பவம்.

எழுத்தாளா சென்னை வந்திருக்கிறேன் என்று ஒருமுறை ஈ என போனில் இளித்திருக்கிறாள் திருமணமான என் நெருங்கிய உறவுக்காரப் பெண்.

ஆத்துக்காரரோட வந்துருக்கியா தனியா வந்துருக்கியா?

தனியாதான் வந்துருக்கேன். அம்மா வீட்ல ஒரு விசேஷம் அதுக்காக வந்தேன்.

அப்படியா. ஒரு நட ஆத்துக்கு வந்துட்டுப் போயேன் ஹாயா பேஷிண்ட்ருக்கலாம்.

அய்யோ அப்பா என்று, பேயின் குரலைக் கேட்டது போல் அரண்டு ஓடியே போய்விட்டாளாம் அவள். என் மனைவி மூலம் கேள்விப்பட்டதிது, என்றாலும் நமக்கெதுக்கு ஊர் வம்பு என்ன சொல்கிறீர்கள்.

ஃபேஸ்புக் கமெண்ட்டிலிருந்த பாலகுமாரன் என்கிற பெயரை அழுத்தி அவரது சுவர் பக்கம் சென்றேன். கண்ணில் பட்ட முதல் பதிவைப் படித்தேன். அவர் மட்டும்தான் முக்தியடைந்து கழண்டு விட்டவற்போல டிஸ்ஜாய்ண்ட்டாய்ப் பேசி நடிக்கிறார் என்று பார்த்தால், அங்கே எடுத்ததற்கெல்லாம் யோகி ராம்சூரத்குமார் யோகி ராம்சூரத்குமார் என ஏகப்பட்டதுகள் ஏசுவே ஏசுவே என்று பேய்ப் பிசாசு பில்லி சூனிய விரட்டலின் வீடியோ மிரட்டலாய்க் கதறியபடி, கத்திக்கொண்டிருக்கின்றன.

எங்கள் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் 90களில் ஓர் அம்மையாரை திடீரென யேசு பீடித்துக்கொண்டார். தாலியைக் கழற்றிப் பெருமாள் படத்தின்முன் போட்ட அந்த அம்மாள், ஆபீஸ் வந்து சோற்று டப்பாவைத் தம் மேசையில் பத்திரமாய் வைத்தபின் கனகாரியமாய் ரூம்ரூமாய் ஆன்மீக உலா தொடங்கிவிடுவார். வருவோர் போவோர் தலையிலெல்லாம் சொடேர்ச் சொடேரென ஆவேசத்துடன் அடித்து யேசுவின் பெயரால் அவர் ஆசீர்வதித்த காட்சிதான் பாலாவின் பக்கத்தில் இருக்கும் பைத்திய விசிறிகளைப் பார்க்கையில் நினைவுக்கு வருகிறது. இப்போது அந்த அம்மாள் சொஸ்தமாகி சவுக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். காயத்ரிகளுக்கும் சாவித்ரிகளுக்கும் புத்தி தெளிந்து சாபல்யமடையப்போவது என்றோ.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் யேசு பீடித்து எதிர்பட்டோரையெல்லாம் ஆசீர்வதித்த அந்த அம்மையார், எத்துனைமுறை அவர் எதிரில் குறுக்குமறுக்காய் நடந்தும் என்னை மட்டும் ஆசீர்வதிக்கவேயில்லை. எவன் திருப்பி ஆசீர்வதித்துவிடக்கூடியவன் என்பதை எவ்வளவு கடுமையான ஆன்மீக போதையிலும் எல்லாப் பைசாசங்களும் கணித்தேதான் வைத்திருக்கின்றன.

புக்ஃபேரில் மனுஷ்ய புத்திரனோடு 13ஆம் தேதியன்று ஒருமணிக்கூர் நடந்த முதல் பஞ்சாயத்தின்போது இடையில் எழுத்துத் தச்சர் வந்தார். மனுஷ்ய புத்திரனிடம் குசலம் விசாரித்துவிட்டு, பில் கவுண்ட்டருக்காய்ச் சென்ற கார்பெண்டர் என்னை கவனிக்கவில்லை. மனுஷ்ய புத்திரனைப் பார்த்து அமைதியாகச் சிரித்தபடி இருந்தேன்.

”தெரியுமா” என்றார் எதிர்கால ராஜ்யசபா கவிஞர். இந்தத் தெரியுமாவை, உங்களுக்கு அவரைத் தெரியுமா, அவருக்கு உங்களைத் தெரியுமா என்று எந்த விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். என்ன இருந்தாலும் பலசரக்குக் கவிஞர் அல்லவா.

”நல்லாவே தெரியும்” என்றேன்

தச்சரின் யதேச்சைத் திரும்பலில், தெய்வீகப் பார்வை என் மீதும் பட்டது,

”எப்பிடி இருக்கே”

நன்றாக இருப்பதாய் அசடு வழிய வேண்டியதாயிற்று.

இதற்குள் தந்தி டிவியோ ஹிந்தி டிவியோ ஓர் இளைஞன் மைக்கை நீட்டியபடி விசிறி சாமியாரின் விசிறியை பேட்டிக்காக அணுகினான்.

’இப்பிடி நடந்துண்டே நம்ம ஸ்டாலண்ட போயுட்லாமா’ என்று அவனிடம் கொஞ்சினார்

’பாலகுமாரன் எவ்ளோ கிளியரா இருக்காரு பாருங்க. பேட்டினு வந்தாங்களேனு குடுக்காம, பேக்ரவுண்டுல தன் புக்குகள் இருக்கணும்னு, ஒரு சின்ன பேட்டி வாய்ப்பைக்கூட விளம்பரத்துக்கு யூஸ்பண்ணிக்கணும்னு நினைக்கிறாரு பாருங்க. உண்மையிலேயே அவரோட இந்த ஆட்டிட்யூட் எனக்குப் புடிச்சிருக்கு என்றார் மனுஷ்ய புத்திரன், முகமெல்லாம் பூரித்து. உலகத்தின் எந்த அல்டிட்யூடுக்குப் போக நேர்ந்தாலும் இந்த மந்தரித்த தாயத்து விற்கிற மாதிரியான ஆட்டிட்யூட் எனக்கு வராமல் காப்பாற்ற எந்த கடவுளைக் கும்பிடுவது என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.

வியாரியை வியாபாரியே காமுறுவர். நன்றாகக் காமுற்றுக் கொள்ளட்டும் நமக்கென்ன பிரச்சனை - நம்வீட்டுப் பெண்ணாக இல்லாதிருக்கும்வரை.

போகியாக வாழ்ந்தபடி யோகியாகக் காட்டிக்கொள்வபவன் உண்மையில் பெரிய ரோகி!