18 November 2012

தேவியும் பேபியும்

மா!

என் தேவி!

காப்பாற்று எனக் கதறும்
இந்த அபலையின் குரல்
உன் காதில் விழவில்லையா?

பேபி!
பக்தையான உன் பக்கம்தான்
நானிருப்பேன் என்றும்
எது குறித்தும் பயம் வேண்டாம்.

அசுரர்கள் முற்றாக அழியவில்லை.
அடங்கியதுபோலொரு
மாயத்தோற்றத்தை நம்பி
மோசம் போய்விட்டோம் தாயே!

மறுபடியும் வரத்தொடங்கிவிட்டார்கள் அம்மா!
கும்பலாய் குரல்கொடுத்து வரவில்லை இம்முறை
ஒருவர்பின் ஒருவராய்
ஆங்காரமின்றி ஓங்காரமின்றி
அமைதியாய் வந்துகொண்டிருக்கிறார்கள்.

நரகாசுரனையே வதைத்த
நானிருக்கிறேன் உன் பின்னால்
எதற்கும் கவலைப்படாதே!

ஆபாச அஸ்திரத்தை
முறியடித்த தாயே!
இம்முறை அவர்கள் ஏந்தியுள்ள ஆயுதத்தை
எதிர்கொள்வது எப்படியென்றே புரியவில்லை

அப்படியென்ன ஆயுதம் கொழந்தே அது?

தர்க்காஸ்திரம்!

இந்தத் தாக்குதலிலிருந்து
உன்னைக் காப்பாற்ற,
முதலில்
என்னைக் காப்பாற்றிக்கொண்டாக வேண்டும்
யோசித்து வைக்கிறேன்

இன்று போய் நாளை வா