25 February 2011

படித்ததில் பாதித்தது - எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுமீன்

சிறுமீன்.
 குறுங்கதை
அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு  அலகில்  மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு.

உங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது. காடுகள்
மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. எல்லாவற்றையும் விட நீங்கள் அழுக்கை சாப்பிட்டு வளரும் அற்ப உயிர்கள். உங்களை நான் கொன்றால் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள். என்னை எதிர்க்க  உங்களால் இயலுமா. உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை அதனால் தான் உங்களைக் கொல்கிறேன். என்று கேலி செய்தது.
இப்படி தினம் கேலியும் அவமானமும் பட்டு சாவதை நினைத்து மீன்கள் மிகவும் வருத்தம் கொண்டன.
ஒருநாள் அந்தக் கொக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்னஞ்சிறு மீன்குஞ்சு ஒன்று குளத்தில் இருந்து  தாவி மண்ணில் விழுந்து துடித்துச் சாக முயன்றது.
அதைக்கண்ட கொக்கு சிறுமீனே..உனக்குச் சாவதற்கு அவ்வளவு விருப்பமா. அல்லது என்னைக் கண்டு பயமா, நீ நன்றாக வளரும் வரை பிழைத்து இருக்கட்டும் என்று தானே விட்டுவைத்திருக்கிறேன்,  அதற்குள் என்ன அவசரம்  என்று கேட்டது.
அதற்கு மீன்குஞ்சு சொன்னது.
கொக்கே,, வானத்தில் பறக்கின்ற பறவைகள் என்றாலே உன்னதமானவை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எளிய உயிர்களைக் கொன்று தின்னும் அற்பங்கள் கூட வானில் பறக்கின்றன என்று உன்னைப் பார்த்த பிறகு தான் அறிந்து கொண்டேன்.
ஒற்றைக் காலில் நிற்பதால் நீ துறவியுமில்லை. வெண்ணிறமாக இருப்பதால் நீ தூய்மையானவனுமில்லை. தோற்றத்தைப் பார்த்து உன்னை அமைதியின் உருவம் என நம்புபவர்கள் முட்டாள்கள். உன்னிடம் சிக்கி உயிரை இழப்பதை விட நானாகச் செத்துமடிவது மேல்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள். எந்தக் கொக்கும் வயதாகி தானாகச் செத்துப் போவதில்லை. எவராலோ கொல்லப்படத்தான் போகின்றன. என்றபடி வீழ்ந்து இறந்தது சிறுமீன்
 **

எனது இளவலும் ட்ரைவின் உட்லண்ட்ஸின் ஆருயிர் நண்பரும் ராம்கி என எங்கள் வட்ட நண்பர்காளால் அன்போடு அழைக்கப்படுகிறவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். இணைய வெளியைத் தனது ஆதார ஓவர் ஹெட் டாங்காகக் கொண்டு இலக்கியமாகவே உயிர்தரித்துக் கொண்டிருக்கும் எஸ்.ரா அவர்களின் எழுத்து, வாசக மனத்தில் ஓயாத அதிர்வலைகளை உருவாக்கும் வன்மை கொண்டவை
அன்னாரின் இலக்கிய தாகம் எப்படிப்பட்டது என்பதை விளக்க, கர்ண பரம்பரைக் கதையாய் இலக்கிய உலகில் உலவும் இந்த ஒரு நிகழ்ச்சியேப் போதுமானது. 
தனது முதல் நாவலை எழுதிக் கொண்டு இருக்கையில் பதிப்பாளரை தினம்தினம் தொலைபேசியில் அழைத்து எத்துனைப் பக்கங்கள் ஆகியிருக்கின்றன என்று இலக்கியப் படைப்பூக்க ஆர்வத்தில் கேட்டுக் கொண்டே இருந்தார். பதிப்பாளரோ ஒரு முறை பொறுமை இழந்து, பக்கக் கணக்கு என்பது பக்க வடிவமைப்பு செய்த பின்னரே துல்லியமாககூடியது, மேலும் எழுத்தாளர் எழுதி அனுப்பும் பக்கங்களை இறுதிப் புத்தக வடிவின் பக்க வடிவமைப்பாக உடனுக்கு உடன் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன எனவும் விளக்கினார். அதன் பிறகு ஆர்வம் மேலெழ, ’அது சரி அது ஏன் பக்கக் கணக்கில் அவ்வளவு முனைப்பாக இருக்கிறீர்கள். எவ்வளவு பக்கங்கள் வந்தால் உங்களுக்கு என்ன கவலை, பதிப்பிக்க நான் மகிழ்வாகவே இருக்கிறேன்’ என்றார். கொஞ்சம் தயங்கியபடி எழுத்தாளர் சொன்னார். ’நாவல் முடிந்து விட்டது, ஆனால் கோணங்கியின் நாவல் 460 பக்கம். அதைவிட ஒரு பக்கமேனும் அதாவது 461வது பக்கத்தை எப்போது தொடுகிறதோ அப்போது நாவலை முடித்து விடலாம், என நினைக்கிறேன். அதற்காகவே கேட்கிறேன்’ என்றார். 
இவ்வளவு பக்காவாகப் பக்கக் எண்ணிக்கையைக் கூடக் கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கிய நாவல் படைப்பதென்பது இலக்கியப் பேராளுமைக்கே உரித்தான லட்சனம் தானில்லையா?
நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால் அவரது இந்தப் பதிவையே கூட எடுத்துக் கொள்ளுங்கள். பதிவர் ஸ்டைலில் படம் போட்டு (துயில், பதிப்பாளரிடம் துயின்றுகொண்டு இருந்துவிடக் கூடாது அல்லவா? தேசாதிதேசம் திரிந்து மார்க்கெட் கணிக்கிற தேசாந்திரி) கதை எழுதுவதோடு நில்லாமல் வடிவ நேர்த்தியிலும் தனது வாசகர்களுடனான நெருக்கத்தை எவ்வளவு நேசத்துடன் அடையாளப் படுத்திக் கொள்கிறார் பாருங்கள். T.ராஜேந்தர் பாணியில் மீனையேப் படமாகப் போட்டிருப்பினும் ஓவியமாக வரையவைத்து வலையேற்றியிருப்பது என்பது, இவரது இலக்கியம் மட்டுமல்லாத பிற துறை ஈடுபாட்டையும் காட்டுகிறது அல்லவா. 
சிறுமீன் என்கிற இந்த அற்புதமான உருவகக் கதை, ஒரு வாசகனாக இலக்கிய உபாசகனாக, பதினாறு வருடங்களாய் இருண்டு கிடக்கிற என் மனதிலும் ஒளிக் கற்றைகளைப் பாய்ச்சி. அந்தத் தாக்கத்தில் என் மனதில் தோன்றிய இந்த எளிய வரிகளை உங்களுடன் பகிந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சிகள் அடைவது அவசியம் தானில்லையா. 
வேலியில் போகும் ஓணான்!
இப்பிடித்தான் ’தொழில் பண்றவனுங்க’ ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஒத்தாசையா இணைய வானில் உருவின உருவம் தெரியாம இருக்க உருவகக் கதை எழுதி.......இப்படித்தான்....
இந்த வரிகள் ‘கொண்டு கூட்டிப் பொருள் கொள்’ என்கிற இலக்கண வகையிலும் ஓயாத சுற்றல் என்கிற காவிய உத்தியிலும் எழுதப்பட்டிருப்பது இதன் விசேச சிறப்பு. 
சினிமாப் பாடல்களில் பல்லவியின் முதல் வார்த்தை மிகவும் பொருள் பொதிந்த்தாய் இருக்கும் அது முடிவது போலவே தொன்றி, தொடரத் தொடங்கிவிடும்.
எடுத்துக் காட்டாக நண்பர் எஸ்.ரா அவர்களுக்குப் பிடித்த சந்திரபாபு அவர்கள் பாடி இறவாப் புகழ் பெற்ற இந்தப் பாடலைச் சொல்லலாம்.
நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லாப் ப்டிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.... நான் ஒரு...
மனித வாழ்வின் பல நிலைகளைப் பேசிச் செல்லும் இந்தப் பாடல், நிறைவுபெரும் தருவாயில் ’முட்டாளுங்க முட்டாளுங்க முட்டாளுங்க முட்டாளுங்க’ எனத் திரும்பத்திரும்ப எதிரொலி போல உயர்ந்து அதன் உச்சத்தைத் தொடும்போது முழுமையடைவது குறிப்பிடத்தக்க அம்சம்.


பி.கு. படித்ததில் ’பாதித்தது’ என்கிற தலைப்பின் பின்பகுதி, ’பாதி இத்தது’ எனவும் பாடபேதம்