14 May 2011

ப்ரூஸ் லீ ஜாக்கி சான் ராஜராஜ சோழன் நான்!


புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை! 

எதை வேண்டுமானாலும் எவன் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது எதன் மீதும் மரியாதை இல்லாமல் சொல்லப்படும் வார்த்தை - ஜெயகாந்தன்

(வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டேன் என்கிற தலைப்பில் - நினைத்துப் பார்க்கிறேன் என்ற தொடரில் பின் 70களில் குமுதத்தில் எழுதியது)

************************

ச.ந. கண்ணன்
THURSDAY, JANUARY 20, 2011

”சென்னைப் புத்தகக் காட்சியில், நான் எழுதியுள்ள ராஜராஜ சோழன் புத்தகம் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. புத்தகக் காட்சியில், கிழக்கில் விற்பனையான நூல்களில், ராஜராஜ சோழன் முதலிடம் பிடித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல், சென்னைப் புத்தகக் காட்சியில் அதிகம் விற்ற ஐந்து புத்தகங்களில் ஒன்று ராஜராஜ சோழன் என தினத்தந்தி, தினமணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

என் வாழ்வின் மகத்தான தருணம் இது.”

புத்தக அட்டையில் ராஜராஜ சோழன் யார்? தாடியா? ஷேவ்டா? ரெண்டுமே இல்லை என்பதே உண்மை.

******************

இந்தப்புத்தகம் குறித்த சில கேள்விகள் முகநூலில் எழுப்பப்பட்டிருக்கின்றன

கிழக்கு பதிப்பகத்தின் ராஜராஜசோழன் - ஒரு ட்விட்டர் மதிப்புரை
by Lalitharam Ramachandran on Friday, May 13, 2011 at 1:34am

கிழக்கில் வெளியாகியிருக்கும் ராஜராஜ சோழன் புத்தகத்தைப் புரட்டினேன். ஆசிரியர் ப்ரூஸ் லீ, ஜாக்கி சான் பற்றி நூல் எழுதியவராம். 

ராஜராஜன் ஒரு பழைய கால ப்ரூஸ் லீ என்று நினத்திருப்பார் போலும். தப்பில்லை. 

நூலில் பெரிய கோயில் பற்றிய விஸ்தாரமாக எழுதியுள்ளார். தஞ்சாவூர் அத்தனை தூரம் இல்லையே - ஒரு முறை பார்த்துவிட்டு எழுதியிருக்கலாம். பரவாயில்லை.

விமானம் எது கோபுரம் எது என்றால் நாலைந்து முறை யோசித்து விட்டு, முதலில்சரியாகச் சொல்லி பிறகு மாற்றிக் கொண்டு, கடைசியில் இரண்டும் ஒன்றாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பார் என்று நினைக்கிறேன்.

வேறொரு இடத்தில் ஸ்ரீவிமானம் என்பதற்கு அருகில் (கோபுரம்) என்று அடைப்புகுறிக்குள் எழுதியதன் மூலம் நமக்கு தெளிவு படுத்துகிறார். கோபுரம் வேற விமானம் வேறயாச்சே என்றெல்லாம் கேட்க நாம் யார்?

கோபுரத்தின் உட்பகுதியில் மணலை நிரப்பி அதன்மேல் ஏறி உச்சியை கட்டினார்களாம். மணலை நிரப்புவதற்கு முன் கட்டிய பகுதியை எதில் ஏறிக் கட்டினார்கள்?

216 அடி விமானத்தில், ஆசிரியர் கணக்குப் படி கோபுரம் எத்தனை அடி, உச்சி விமானப் பகுதி எத்தனை அடி? கோபுரமும் விமானமும் ஒன்றில்லையா - எல்லாவற்றையும் ஒரே நூல் விளக்க முடியுமா? உழைப்பு வோணும் சார்!
கனமான மணல் என்கிறாரே? மணலில் இரும்பு கலந்திருக்குமோ?

தஞ்சாவூர் கோபுரக் கூம்பை மண்ணால் நிரப்பி அதன் மேல் நின்று உச்சியை மூடி விட்டால், வேலை செய்த ஆளுக்கு அப்படியே அனார்கலி டைப் சமாதியா? - படம் மட்டும் கவிழாமல் இருந்திருந்தால் மணிரத்னம் கவிதையாய் காட்சியாக்கியிருப்பார்.

உத்தம சோழனின் கயவாளித்தனங்களை உடனிருந்து ஆசிரியர் பார்த்திருப்பார் போலும். அதை வைத்தே அடுத்து ஒரு நாவலும் எழுதலாம். 

நாங் கொடுத்தனவும் கல்வெட்டுக்கு ஒரு பொழிப்புரை எழுதியிருக்கிறார் பாருங்கள். படித்ததும் கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்கியது. 
கந்தர்வர் வான்லோகத்தைச் சார்ந்தவர்கள் என்ற கூறிய கையோடு, சோழர் காலத்தில் கோயில்களெங்கும் கந்தர்வர்கள் இருந்தனர் என்கிறார். 

சோழர் காலத்தில் ஏலியன்ஸ் என்று வரலாற்று சயின்ஸ் ஃபிக்‌ஷனுக்கு முன்னோடியாக இந் நூல் விளங்கலாம்.

தஞ்சை கருவறையில் 81 நாட்டிய சிற்பங்களை திட்டமிட்டு ராஜராஜன் அமைத்தது போல நூலாசிரியர் எழுதியுள்ளார். ஒரு முறை நேரிலும் பார்த்திருக்கலாம். பார்த்திருந்தால் கருவறையில் இந்தச் சிற்பங்கள் எங்கு உள்ளன என்றும் கூறலாம். 

சுந்தரர், சேரமான் பெருமாள், திரிபுராந்தகர் ஓவியங்கள் இருந்தன என்றொரு வரி வருகிறது. இப்போது அந்த ஓவியங்கள் அங்கு இல்லையா? 

தஞ்சை கோயில் செப்புத் திருமேனிகளைப் பற்றி புளகாங்கிதத்தோடு எழுதியதோடு, எந்தெந்த திருமேனிகளை இன்று பார்க்கலாம் என்றும் சொல்லியிருக்கலாம்.

போர்காட்சிக்கு சிவப்பு வண்ணம் உபயோகித்தனராம். அட்டைப் படத்தில் ராஜராஜன் ஓவியம் என்று ஒன்று வெளியாகியுள்ளது. 

அதில் ராஜராஜன் சிவப்பாக தெரிகிறாரே. அவரும் கருவூர் தேவரும் போரில் இருக்கும் காட்சிதானோ என்பதையும் விளக்கியிருக்கலாம். 

கல்கிக்கு சரியான கொழகொழ பார்ட்டி. உத்தம சோழனுக்கு மேல் தேவையில்லா கரிசனம். நம் ஆசிரியர் கறார் கனகலிங்கம். மதுராந்தகனை கழுவேற்றிவிட்டார்.

ஃபேமிலி ட்ரீயெல்லாம் பக்காவாக வரைந்துவிட்டு, மதுராந்தகனை ராஜராஜனின் சிற்றப்பன் மகன் என்றிருப்பது கவனக் குறைவா? வரலாற்று திருப்பமா?

ராஜராஜன் மன்னராக வேண்டும் என்று மக்கள் விரும்பியதை உடையார்குடி கல்வெட்டு சொல்லுதாமே? எந்த எஸ்.ஐ.ஐ. வால்யூமில் இந்தக் கல்வெட்டு உள்ளது என்று சொல்ல முடியுமா?

வரலாறு.காமின் ஏழாவது இதழை பார்க்கத் தெரிந்த ஆசிரியருக்கு முதல் இதழைப் பார்க்கத் தெரியவில்லையா? தெரிந்தும் பார்க்கவில்லையா?

காட்டுமன்னார்கோயில் பின் சுவரில் எனக்கு நூல் சுட்டும் கல்வெட்டைக் காணக் கிடைக்கவில்லை. ஆசிரியர் பார்த்துப் படித்து எழுதினாரா?

எண்ணற்ற ஊர் பெயர்கள் தவறாய் அச்சிடப்பட்டுள்ளன. ஆங்கில மூலத்தை தமிழ் படுத்தும் போது எழுந்த சிக்கலோ என்றும் தோன்றுகிறது.

நீலகண்ட சாஸ்திரி, பண்டாரத்தார் தவிர, ராஜராஜசோழன் சிவாஜியாய் நடித்த படத்தையும் துணையாகக் கொண்டு சில பகுதிகள் எழுதப்பட்டுள்ளன.

நூல் சுட்டும் துணைநூல்கள் தரமானவை. நாம் படித்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கொடுத்திருக்கிறார் போலும். 

கடந்த இரு நூற்றாண்டுகள் வரை பெரிய கோயில் பற்றி தவறான கருத்துகள் பரப்பப்பட்டன என்று ஓரிடத்தில் வருகிறது. இனி அந்த வருத்தம் வேண்டாம்.