05 March 2023

ஆபீஸ் அத்தியயம் 34 வம்பு

வெயில் உச்சிமண்டையைப் பிளந்துகொண்டு இருந்தது. அங்கேயே ஓரமாய் இருந்த கொஞ்சூண்டு நிழலில் ஒதுங்கி நின்று தம் அடித்தான். இன்னும் கொஞ்ச நேரம் ஆனால் லஞ்ச் டைம் வந்துவிடும். எப்படியும் சாப்பிடப் போயாகவேண்டும். அதற்கெதற்கு ஆபீசுக்குப் போய்க்கொண்டுஅப்படியே ஓட்டலுக்குப் போனால் என்ன என்று தோன்றிற்று. அவர் சொன்ன ஓட்டலை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

கனகராஜ் சொல்லிவிட்டுப் போன, சந்திரா - மரிய சந்திரா ஆன கதை மண்டைக்குள் ஒட்டிக்கொண்டு தன்னிச்சையாக  ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பெண்மணி பாவம்,பார்க்கக்கூட அப்படியொன்றும் தளதளப்பாக இல்லை. இப்படி ஈர்க்குச்சி போல இருப்பவர்களைமராட்டியில் பாவப்பட்ட உயிர் என்கிற பொருளில் பாப்பி ப்ராண என்று அம்மா சொல்வது நினைவுக்கு வந்தது. 

அம்மா அப்படியொன்றும் ஈர்க்குச்சி இல்லை. கொஞ்சம் பூசியபடிதான் இருப்பாள் என்றாலும் ஒருவிதத்தில் அவளும் பாப்பி ப்ராணன் என்றுதான் சொல்லவெண்டும் என தோன்றியது. அம்மா பற்றிய அனுதாப நினைப்பு ஆச்சரியத்தை அளித்தது. உள்ளூர அவனுக்கும் எல்லோரையும் போல அம்மாவைப் பிடிக்கும்தானோ. அதனல்தான் வண்ணதாசன் அம்மாவைத் தொட்டதும் விருட்டென திரும்ப ஓடிவந்துவிட்டானோ.

அம்மாஅப்பாவுக்கும் அவனுக்கும் எரிச்சலூட்டும் வஸ்துவாக இருந்தாளேயன்றி பொருட்படுத்தும் ஜீவனாக என்றுமே இருந்ததில்லை. எப்போதுமே இருந்ததில்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிடமுடியுமா என்றும் தோன்றிற்று.