21 April 2011

இலக்கியக் கலோரிகள்



fromKanakkadalan 
toவிமலாதித்த மாமல்லன்
dateThu, Apr 21, 2011 at 12:26 PM
subjectவணக்கம்
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12:26 PM (35 minutes ago)
அன்பின் மாமல்லன்,
தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை எனது பதிவில் இட்டுள்ளேன். ஏதேனும் தவறிருப்பின், சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
நன்றி,

கனாக்காதலன்

கனாக்காதலன்,

உங்களுக்குத் தோன்றுவதை நீங்கள் எழுதுவதற்கு என்ன தயக்கம். 



அதை ஒரு தகவலாக எனக்குத் தெரிவிப்பதே அதிகபட்சம் என நினைக்கிறேன். அபிப்ராயங்கள் அவரவருடையவை. தகவல் பிழை மட்டுமே தவிர்க்க வேண்டியது. ஒருவரின் கருத்துக்களைச் சம்பந்தப்பட்டவர் ஏற்கலாம் எதிர்க்கலாம் தர்க்க ரீதியாக சரி தவறை நிறுவப் பார்க்கலாம் ப்ச்ச என்றபடி சும்மாவும் போகலாம் 

உயிர்த்தெழுதல் எப்போதும் உள்ளே தர்க்கிப்பதால் உருவாவது. தாய் தந்தையர் கொடுத்த பெளதிக வடிவை, மனதால் ரசனையால் உயிர்த்தெழ வைக்கிற பல்லாயிரப் புறக்காரணிகளில் எவனெவனோ தன்னைத் தேடிக்கொள்ளப் பார்ப்பதைக் கூர்ந்து கவனித்து நம்மை நம் சுயத்தை நாம் உருவாக்கிக் கொள்கிறோம் - அடுத்தவரிடம் இருந்து சுவீகரித்தும் நிராகரித்தும் நடக்கிற தன்னிச்சை உருவாக்கம். 

வளர்கிறேன் என்றோ வளர்க்கப்போகிறேன் என்றோ முன் அறிவிப்புடன் மூளை வளருமா? பசிக்கும் ருசிக்கும் சாப்பிடும் உணவு கலோரியாகிறது. கலோரி கலோரியாய் இலக்கியத்தைக் கணக்கிட்டுச் சாப்பிடத் தொடங்குதல் யந்திரப் பராமரிப்பாகவே முடியும். பார்வைக்கு மிரட்டும் பிரும்மாண்ட யந்திரம். அசைவு மட்டுமே உயிர் துடிப்பு இருப்பதற்கு ஆதாரமாகுமா?

பார்க்கப்போனால் எவனும் எவனுக்கும் நன்றி சொல்லத் தேவையில்லை. 

வழவழா கொழகொழா என்றில்லாமல் எதையும் தனித்த பார்வையில் பார்க்கவும் உள்வாங்கிக் கொள்ளவும் எதிர்கால விளைவுகள் பற்றிய பதற்றத்தை மனிதாபிமானப் போர்வையில் மறைத்து அபிப்ராய சமரசங்களுடன் மொண்ணை வாழ்வு வாழாது இது என் நிலைப்பாடு என உறுதியாகச்சொல்ல, உலகம் பூராவிலும் முகம் தெரியாத எவரெவரோ உதவிக்கொண்டிருக்கிறார்கள் - உதவுவதாய் சொல்லிக் கொள்ளாமல், யாருக்கேனும் உதவக்கூடும் என்கிற அனுமானத்தில்.

சாப்பிடும் அளவல்ல செரிமானத் திறனே சக்தியாக உயிர்த்தெழுகிறது.