06 September 2011

எதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி?

சீக்கிரம் பணக்காரர் ஆவது எப்படி?
சினிமா இயக்குநர் ஆவது எப்படி?
காதலியைக் கவர்வது எப்படி?
அடுத்தவரை எளிதாய் வெல்வது எப்படி?

இப்படியான எப்படி வரிசைப் புத்தகங்களை எழுத ஏராளமானோர் கிடைக்கக்கூடும். ஆனால் எதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி? என்கிற தலைப்பில் எழுத யார் கிடைப்பார்? இதென்ன இப்படியொரு கேள்வி, ஏன் நானில்லையா என ஏட்டிக்குப் போட்டியாய் சொல்லக்கூட ஆள்கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

பாண்டிச்சேரியில் இளைய எழுபதுகளாய் இருக்க வேண்டும். கடற்கரையில் நிற்கும் காந்தி சிலைக்கு அடியில்தான் சுதந்திரதின விழாமேடை. நாலடி உயர நண்டு, அணிவகுப்பு அலங்கார வண்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை சவுகரியமாய் வேடிக்கை பார்க்க விழாமேடைக்கு எதிரில் இருந்த தந்தையின் அலுவலகத்தை ஏதுவான இடமாய் தேர்வுசெய்துகொண்டது அலுவலகத்தின் பிரதான வாயில் மரச்சட்டங்களால் போடப்பட்டிருந்த காலம். சட்டங்களுக்கு இடையில் முகத்தையும் பொறுத்திக் கொண்டது. பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் பெரியவர்களின் நெரிசலில் நண்டு நசுங்கியதோடு அல்லாமல் தலையில் கொக்கியால் தாளிடப்பட்ட மரக்கதவும் பலூனாய் முன்னோக்கி உப்பத்தொடங்கிற்று. கதவிற்குச் சற்று முன்னால் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரரின் முதுகைத் தொடப்போவதைப்போல மரக்கதவு உப்பிக்கொண்டிருந்ததில் நாம்தான் போலீசை முதலில்போய் முட்டப்போகிறோம் என நண்டுக்கு பயம் வந்துவிட்டது.

சார் சார் பாருங்க இவங்கத் தள்ளறத் தள்ளுல மார்ச்பாஸ்ட்டு பரேடுல நானும் போயிடுவேன் போல இருக்குதே!

தள்ளிக்கொண்டிருந்த கும்பல் சட்டென சிரிக்கத்தொடங்கிவிட்டது. யார்ப்பா அது என்று சிரித்தபடி போலீஸ்காரரும் திரும்பி, குரல் தேடி கீழே பார்த்தவர்,

அட நீயா! பரவால்லப்பா இந்த வயசுலையே இவ்ளோ வாய் இருக்கே கவலையே இல்லை நீ பொழச்சிக்குவே.

சிங்கிள் டீக்கு துட்டு இருந்தா போதுமா சார். பொழச்சுக்குவேனா?

அவ்வளவுதான். அதுவரைக் கனிவாய் சிரித்த முகம் இறுகிக் கருக்கவும் சுற்றிநின்ற கனவான்களில் யாரோ ஒருவர், தம்பி சும்மா நின்னு வேடிக்கை பாருப்பா என்று அதட்டினார்.

பொதுவெளியில், உற்சாகமாய்ப் பாராட்டிய நபரை எதிரியாக சம்பாதித்தது இப்படித்தான்.

வெற்றிகரமாய் மூளையை ஜேப்படி செய்வது எப்படி என்பதில் நிபுணத்துவம் பெற்ற பதிப்பகங்கள் கூட, இப்படி ஒரு தலைப்பில் புத்தகம் போட முன்வருமா? அப்படியே அதிசயமாய்ப் போட்டாலும் ஆணுறை, நேப்கின்கள் போன்றவற்றைப் பக்கத்தில் யாருமற்ற போது மட்டுமே வாய்விட்டுக் கேட்டு வாங்கும் கண்ணியப் பெருங்கூட்டத்திற்கிடையில் இந்தத் தலைப்பில் இருக்கும் புத்தகம் என்றால் வாங்குவது இருக்கட்டும், நின்றபடிப் புரட்டியேனும் பார்ப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

வேலையில் இருக்கையிலேயே தந்தை இறந்த காரணத்தால், அனுதாபத்தின்பேரில் வேலை கிடைக்க வாய்ப்பிருந்தபோது, சமீபத்தில் மறைந்துபோன, 81-82 வாக்கில் அடிஷணல் கமிஷ்ணராய் இருந்த, பரீக்ஷா நாடகங்களின் பார்வையாளரும் சிறுபத்திரிகைச் சூழலில் இருந்தவருமான அது அந்தக்காலம் புகழ் எஸ்.வி.ராமகிருஷ்ணன் ஐஆர்எஸ் அவர்கள் கூறிய எச்சரிக்கை அறிவுரை.

மத்திய அரசாங்க வேலை கிடைக்கிறதே என்பதற்காக வேலையில் சேராதே. உன் இயல்புக்கு இந்த வேலை ஒத்துவராது. இது ஒருவிதமான, அதிகாரிகளின் கட்டளைக்குக் கேள்வி எதுவும் கேட்காமல், எஸ் சார் எஸ் சார் என்று சொல்லியாக வேண்டிய செமி போலீஸ் செமி ராணுவம் போன்ற அலுவலக அமைப்பு. தினப்படியாய் சீருடை அணியாவிட்டாலும் அதிகாரிகளுக்குக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே ஒழுங்கு என்று அனுசரிக்கும் துறை. நிர்வாக தரப்பிலிருந்து பார்த்தால் அது தவறுகூட இல்லை என்றே சொல்லவேண்டும். எல்லோரும் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் எவன்தான் கடமைகளைக் கட்டளைகளை நிறைவேற்றுவது? எடுத்ததற்கெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தால் நிர்வாகம் எப்படி நடக்கும்? போகவும் டிகிரியும் இல்லாததால் உனக்குக் கிடைக்கப்போவதென்னவோ அடிமட்ட எல்டிசி வேலைதான்.என்றாலும் எவன் பேச்சுக்குக்கும் கட்டுப்படாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனதில் பட்டபடிப் பேசித்திரிந்து உன் போக்கில் வாழ்வதால்தான் உன்னால் எழுத முடிகிறது. எனவே உன் இயல்பையும் குறை சோல்ல மாட்டேன். ஆனால் இந்த இரண்டும் ஒரே இடத்தில் இருப்பது இருவருக்கும் நல்லதில்லை. யோசித்து செய் என்றார்.

பெரியார் தம் இயக்கத்திற்கு வருவோருக்குக் கூறிய பிரபலமான மேற்கோளையே எஸ்விஆர் அவர்கள், அரசு நிவாகம் பற்றி வேறு வார்த்தைகளில் சொல்வது போல இருந்தது. 

என்னிடம் வருபவன் நான் சொல்வதைச் செய்பவனாக மட்டும் இருந்தால் போதும். சொந்தமாக யோசிப்பவன் எனக்குத் தேவை இல்லை. ஆனால் வருவதற்கு முன் என்னிடம் வருவதா இல்லையா என நன்றாக யொசித்துவிட்டு வரட்டும் என்றார் பெரியார்.

சமுதாயத்திற்கு ஏதேனும் உருப்படியான காரியம் செய்த எல்லோருமே,  எல்லோரையும் கலந்தாலோசிப்பதாய் ஒப்புக்கு ஜனநாயக பாவனை காட்டினாலும் உள்ளூர சர்வாதிகாரிகளாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். தோள்மேல் கைபோட்டு ஒன்றாக நடக்கும் இரண்டு நண்பர்களுக்கிடையிலும் ஒருவன் எடுக்கும் முடிவை மற்றவன் அனுசரிப்பதாலேயே டீ காபி கூட நிம்மதியாய் சாப்பிட முடிகிறது.

அனுதாபத்தை ஏற்று அரசு வேலைக்குப் போகாமல், பத்திரிகையாளனாய் ஆக உள்ளூர ஆசை இருப்பினும் கூடவே சிறு தயக்கமும் இருந்தது. காரணம், அதற்கு சில மாதங்கள் முன்னர்தான் கணையாழி கஸ்தூரிரங்கன் அவர்கள், ”படைப்பு எழுத்தாளனாக ஆகவேண்டுமென்றால் பத்திரிகைத்துறைப் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்காதே. ஒவ்வொரு நாளும் பத்திரிகைக்கு எழுதியே கரைந்து போவாய். எழுத்துக்கு ஸ்நானப்ப்ராப்தியே இல்லாத எதாவது ஒரு வேலைக்குப் போய்விடு, குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது உன்னால் உருப்படியாய் எதாவது எழுத முடியும்” என்று அவரது பத்திரிகைத்துறை ஆசான் அறிவுரைத்ததாகவும் அதை ஏற்காமல் போனதன் வருத்தம் தொனிக்கச் சொன்னதும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இதற்குமேல் யோசிக்க என்ன இருக்கிறது? எழுத்தாளன் என்ற ஹோதா இருந்தாலும் எவனிடமும் யாசிக்காமல் இருக்க ஒரே வழி கிடைத்த வேலையில் சேருவதுதான். சுயத்தைக் கரைத்துக்கொள்ள மறுக்கும் எவனுக்கும் சமுதாயத்துடன் தீராத கரைச்சல்தான் என்பது வேலையில் சேர்ந்த பிறகுதான் பிடிபட்டது. முதலாம் ’பணிபட்’ இரண்டாம் ’பணிபட்’ என்று வரிசையாய்ப் போர்களில் ஈடுபடுவதே தொழில் என்று ஆனது.

அவ்வப்போது அலுவலகத்திற்கு வந்து போய்க்கொண்டிருந்த பிரமிள் கூட ஒரு முறை அலுவலகப் பிரச்சனைக்குத் தீர்வு கூறினார்.

ஓய் உம்ம பிரச்சனைக்கு ஒரே தீர்வு இதுதான். உமது பெயரின் கூட்டுத் தொகை இதுவாக வருகிறது. அதில் ஒரு A சேர்த்து நரசிம்மன் என்பதை நாரசிம்மன் என்று எழுதினால் அப்புறம் ஆபீசில் பிரச்சனையே இருக்காது என்றார்.

இது ரொம்ப நாத்தமா இருக்கும்போல இருக்கே என்றேன்.

இதுதான் இந்த மூட உலகத்தின் பிரச்சனை. எத்துனைப் பேருக்கு என் விலைமதிப்பற்ற ஜோதிட சாஸ்திர அறிவை இலவசமாக அளித்திருக்கிறேன் தெரியுமா? சுந்தர ராமசாமி இந்த விதத்தில் எனக்குத் தரவேண்டிய பணம் எவ்வளவு தெரியுமா எனக் காச்சு மூச்சென்று கத்த ஆரம்பித்துவிட்டார். ஒட்டுமொத்த அலுவலகமும் என்ன சண்டை என்று எட்டிப் பார்த்துப் பரபரத்தது.. என்னைப் பார்க்க வந்தவர் எனத் தெரிந்ததும்தான் சற்று அமைதியானது. அலுவலகத்தின் சொந்த கிறுக்கே இப்படி இருக்கையில் அதைப் பார்க்க வந்த கிறுக்கு வேறு எப்படி இருக்கும் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டதுபோலும்.

அலுவலகப் பிரச்சனை மட்டுமல்லாது ஈழப் பிரச்சனைகூட இதேபோல் சுமுகமாய்த் தீர 84-85 வாக்கிலேயே பிரமிள் சொன்ன ஆலோசன, எல்டிடிஇ - ஸ்ரீலங்கா என்கிற பெயர்களில் சிறு எழுத்து மாற்றங்களை ஏற்படுத்துவது. எந்தப் பிரச்சனை தீருகிறதோ இல்லையோ பிரமிளுடன் சண்டை வந்ததும் இதெல்லாம் பெருத்த ஜோசிய ‘பில்’ பிரச்சனைகளாக ஆகிவிடும்,

இப்போது சப்வே இருக்கும் மேட்லி ரோடில் 82ல் நம்பிராஜன் வீட்டிற்கு ஒருநாள் சென்றிருந்தேன். சற்று நேரம் முன்னால்தான் வீராச்சாமி (மகஇக) வந்து சென்றதாக தெரிவித்தார். அருகில் இருந்த பிரமிளின் மேல்நோக்கிய பயணம் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்திருக்கிறார் வீராச்சாமி. எதாவது பேசுவதற்காகவென்று, நம்பிராஜன் அந்த புத்தகத்திற்கு தாமே ப்ரூஃப் பார்த்ததாகவும் அநேகமாக அதில் எழுத்துப் பிழைகளே இருக்காது எனவும் கூறி இருக்கிறார்.

புத்தகத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி இதில் பிழையே இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா என்று கேட்டிருக்கிறார் வீராச்சாமி.

நம்பிராஜன் வாய்விட்டு சிரித்துவிட்டார்.

வீராச்சாமி சுட்டிக்காட்டியது புத்தகம் எழுதியவரின் பெயராய்க் குரிப்பிடப்பட்டிருந்த “ஜி சளெந் அரூப் ப்ருமீள்”

கம்யூனிஸத்தில் தீவிரமாய் இருந்தவர்களுக்கும் கூட நகைச்சுவை உண்ர்வு இருந்த பொற்காலம் அது.

என் அலுவலகக் கூச்சலுக்குப் பின் பிரமிள் தாமாகவே சமாதான குணவானாகி, சரி குறைந்தபட்சம் கையெழுத்துப் போடும்போதாவது உன் பெயரைப் பிளந்து நர சிம்மன் என்றாவது கையெழுத்து போடு என்றார். முஸ்லீம் சாமியாரைத் தலைமுழுகினாலும் அவர் மூலம் அறிமுகமான அத்தர் தொடர்வதுபோல ’பிளவுப் பெயர் கையெழுத்து’, பதவி உயர்வுக்குப் பின்னும் பலகாலம் தொடர்ந்தது.

ஆனால் என்றும் தொடர்வது பிறவிக்குணம். வேலைக்குச் சேர்ந்த போது யாரிது ஜிப்பா ஜோல்னாப்பையுடன் ஆபீசில் திரியும் வேற்று கிரகத்து ஜந்து என்று பார்க்கப்பட்டது, சில வருடங்களுக்குள், ஐயோ அவனா என்றாகி ஒரு கட்டத்தைத் தாண்டியும் அப்படியே இருக்கப்போய் அது அப்படித்தான் என்று சகஜமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அநேகமாய் பிரச்சனைக்கான தீர்வு பெசண்ட்நகர் மின்சார சுடுகாட்டில்தான் இருக்கிறது போலும்.

ஆனால் அதிகாரிகளுக்குத்தான் என்ன ஒரு சாஸ்வத உணர்வு. ஏதோ ஒரு மாநிலத்தில் தற்போது அதிஉயர் அதிகாரியாய் இருப்பவர், 1994ல் மெட்ராஸில் துணைஉயர் அதிகாரியாய் இருந்தார். தங்கச் சட்டம் போட்டு மனதில் மாட்டி வைத்திருக்கும் சான்றிதழ் அப்போது கொடுக்கப்பட்டதுதான்.கோபம் வடிந்தபின் ஒரு நாள் அவர் வீட்டில் டீ குடித்துக் கொண்டிருக்கையில் கூறினார்.

You have mastered the art of antagonizing others. என் அறையில் அன்று நீ உன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விடாது வாதம் செய்தபோது எனக்கு வந்த கோபத்திற்கு உன்னை எங்கேனும் கோடியக்கரை கோட்டைப்பட்டிணம் மணல்மேல்குடி என்று தூக்கி அடித்திருப்பேன். யார் செய்த புண்ணியமோ அதிர்ஷ்டவசமாய் இன்று நீ இங்கே இருக்கிறாய்.

சார். நீங்கள் சொல்லும் கடற்கரை ஊரெல்லாம் திருச்சி கஸ்டம்ஸின் கீழ் வரும் இடங்கள். அங்கெல்லாம் இன்ஸ்பெக்டர் போஸ்ட்தான் உண்டு. அதை விட்டால் ஹவில்தார் சுக்காணி சிப்பாய் இவர்கள்தான். நானோ சாதாரண டாக்ஸ் அசிஸ்டெண்ட். வெறும்  குமாஸ்தா. என்னை அங்கே போடவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 100 பேரையாவது ஓவர்லுக் பண்ணி, முதலில் எனக்குப் பிரமோஷன் கொடுக்க வேண்டியிருக்கும். சார். 

O! I see, I din't know that. 

ஹிஹிஹி. சரி சார். நன்றி கிளம்பறேன் சார்.

என்ன தெரியாது? இவன் குமாஸ்தா என்பதுகூடத் தெரியாதா? இல்லை பெரும்பாலும் இன்ஸ்பெக்டர் மட்டுமே இருக்குமிடம்தான் கடற்கரை என்பது தெரியாதா? இல்லை மேற்குறிப்பிட்ட கடற்கரை ஊர்கள் மோசமான வாழ்நிலைகளைக் கொண்டவை, அதிலும் குறிப்பாக நகரத்தைச் சேர்ந்த்வனுக்கு என்பது மட்டுமே தெரியுமா? ஒரு டீயை வாங்கி, கையை கிளாஸின் மேல் மூடாமல் அரை நிமிடம் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தால் ஐம்பதிலிருந்து நூறு ஈக்கள் மொய்த்தபடி டீ குடிக்கும் என்பது மட்டும் தெரியுமோ?

கோபம் வந்தால் ஒரே கையெழுத்தில், கேட்க நாதி இல்லை என்பதால்,  கீழிருப்பவனைக் கிள்ளுக் கீரையாய்த் தூக்கி எங்கு வேண்டுமானாலும் கடாசிவிட முடியும். குறைந்தபட்சம் ’ஆண்டை’ அந்த இடம்விட்டு மாறும்வரை அலுவலனைத் தலைதூக்கவிடாமல் அடிக்க முடியும்.  எந்தெந்த இடங்கள் தண்டனை போஸ்டிங் என்பது மட்டும் தெரியும். அது எந்த படிநிலைக்கானது என்பது கூடத்தெரியாது. அதை அனுபவிக்கப் போகிறவன், அவன் குடும்பத்தின் கதி என்ன என்று எதைப்பற்றியும் அக்கறை கிடையாது.

பள்ளிப்பருவத்தில் கை நீட்டச் சொல்லிப் பிரம்பால் அடிவிழும். உள்ளங்கையை ஊதியபடி ஐயோ வலிக்கிதே என்றால் வலிக்கணும்னுதானடா அடிக்கிறதே என்பார் ஆசிரியர் பின்னும் இரண்டடி போனசாய்ப் போட்டு.

அங்குச வலியாய் பயமாய் கற்பிக்கப்பட்ட அனுபவமாய் அரசு இயந்திரத்திற்குள் செலுத்தப்பட்டு அனுசரனைக் கீழ்படிதலாய் இரத்தத்தில் வியாபித்திருக்கிறது.

ஆனால் அடிமை வாழ்வில் வெற்றிக்கொடி நாட்டியவ்ர்களின் தாரக மந்திரம் என்ன தெரியுமா?

முன்னாடி ஒரு சார் பின்னாடி ஒரு சார் போட்டாலே சந்தோஷமாயிடறவனுங்கப்பா இந்த ஹையர் அஃபீஷியஸு.இந்தா வெச்சுக்கோன்னு இன்னும் ரெண்டு சாரைக் கூட சேத்துப்போட்டுக் குடுத்துட்டுப் போய்க்கிட்டே இருப்பியா அதை விட்டுட்டு அவங்கிட்டப்போய் அநாவசியமா ஆர்க்யூ பண்ணிகிட்டு...

அவனைத் தவிர எவனைப்பற்றியும் ஆயிரம் விமர்சனங்கள் உள்ளூர இருந்தாலும் பெரும்பாலான இலக்கியவாதிகள் ஏன் எழுத்தில் அதை வைப்பதில்லை என்று இப்போது புரிகிறதா?

குமாஸ்தாக்களாலேயே ஆனது ஒட்டுமொத்த உலகும்.