15 September 2011

அமல் படுத்தல்

சம்பளத்தை நேரடியாக வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளும் செளகரியத்தை சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு அமல்படுத்திற்று. ஆரம்பத்தில் பரிசோதனை முன்னோட்ட முயற்சியாய் 2001-2002ல் ஒரு சுற்றறிக்கை மட்டும் வந்தது. திருச்சியில் அப்போதிருந்த துடியான கூடுதல் உயர்அதிகாரி ஒருவரின் தனிப்பட்டமுயற்சியால் தனியார் வங்கியில் பேசி இது அமலுக்கு வந்து விட்டது வேறு விஷயம். 

அனுகூலமாக அரசால் அறிவிக்கப்படும் சமாச்சாரம் அரசு அதிகாரிகளால், கீழ்படியில் இருப்போரை அடையும்போது எப்படிக் கெட்ட சொப்பன சத்ருவாக ஆகி விடுகிறது என்பதைப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அது திசை மாறிக் கட்டுரையாளனின் கைமீறிப் பறக்கவும் சாத்தியமுண்டு.

மேட்டர் இவ்ளதானா என்பவர்கள் தயவுசெய்து தேச புணருத்தாரணத்திற்காக சேமித்துக் கொண்டிருக்கும் அவர்தம் சக்தியை அநாவசியமாய் சிந்தி விரயமாக்காமல் குல்லாவுக்குள் சேமித்து இங்கிருந்து விலகிக்கொள்ளவும்.

2005ல் திட்டத்தை அமல்படுத்தலாம் என அறிவிப்பு வந்ததும், சென்னையில் அதிகாரபூர்வமாய் அமலுக்கு வந்தது. அதற்குள் மாநில அரசின் ஆசிரியர் பேருந்துத் தொழிலாளர் என பெரும்பாலோருக்கு வங்கியே வைகுண்டவாசல் ஆகிவிட்டிருந்தது. பணிபுரிந்த அலுவலகத்தின் அப்போதைய ஆண்டவர் ஒரு அதிபயங்கரர். அரசு ஏதேனும் ஒன்றை அறிவித்துவிட்டால் போதும். அது கட்டாயமா, இல்லை கனிவான வழிநடத்தலா என்பது பற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை. மேலிருந்து வந்த ஆணை எதுவாய் இருப்பினும் மீசையைத் தடவியே நூறு சதவிகிதம் அமல்படுத்திவிட்டுத்தான் தலை சாய்ப்பதென விரதம் மேற்கொண்டிருந்தவர். அவர் சென்னைக்கு மாற்றலாகி வருகையில் ஒரு குட்டி அதிபயங்கரரையும் மடியில் கட்டாத குறையாய்க் கூடவே கூட்டி வந்திருந்தார்.

சட்டரீதியில் பார்த்தாலே வங்கிமூலம் ’மட்டுமே’ சம்பளம் வழங்கப்படும் என்பது இன்னமும் கூடக் கட்டாயமாக்கப்படவில்லை. நேரடியாக ருபாய் நோட்டுககளாய் சம்பளம் பட்டுவாடா செய்யப்படக்கூடாது என்று சட்ட்ம் சொல்லும் வரை பணமாக சம்பளத்தைக் கையில் வாங்க பரிபூரண சட்ட அனுமதி உண்டு. எவ்வளவு சட்ட ஆதாரங்களை எடுத்துக் காட்டினாலும் குத்திய முத்திரை குத்தியதுதான் என்கிற இணைய சண்டிகள் போலவேதான் முரட்டு அதிகாரிகளும். என்ன இருந்தாலும் இது ஜனநாயக நாடல்லவா, மூடத்தனம் மட்டும் ஏதோ சிலருக்கானது என சொந்தம் கொண்டாடுவ்து நியாயமில்லைதானே. ஓஸி பிளாக்கில் குஞ்சவிருத்தி செய்யும் நமக்கே  கபோதம் சிண்டைப்பிடித்து ஆட்டுகிறபோது, ஆயிரம்பேரை தனக்கு அடியில் முடிந்திருப்பதாய் நினைத்துக் கொள்பவருக்குக் கேட்க வெண்டுமா?

கடைசி தேதி குறிக்கப்பட்டு, இந்த வங்கியில்தான் உனக்கு இனி சம்பளம். இதோ வங்கிப் படிவம். இன்னமும் இங்கே கணக்கு திறக்காத கபாலிகளுக்கெல்லாம் இந்த தேதிக்குள் திறக்கவில்லை என்றால் இந்த மாதக் கடைசியில் சம்பளம் போடப்பட மாட்டாது என்றொரு தண்டோரா சுற்றறிக்கை வந்தது.

இப்படியாகத்தானே, ஏற்கெனவே வேறு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்த கொம்பன் சும்பன் எல்லோருக்கும் உங்களது வங்கியின் நந்தனம் கிளையில் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டியது, சித்திரகுப்தன் எழுத்தாயிற்று.

நிறைவு செய்யப்பட்ட படிவம் கொடுக்கப்போனபோது சர்தாரிணி போல ஆஜானுபாகுவாய் வாயிலை பார்க்க அமர்ந்திருந்தார் ஒரு ஆண்ட்டி, இரண்டு திட்ட அம்சமாய் பஞ்சாப்பின் செழிப்பிற்கு விளம்பரத் தட்டியாய் வீற்றிருந்தார். தூர இருந்து ஜொள்விடவும் வழியில்லை. திறந்த கதவுவழி நுழைந்ததுமே கம்பீரமாய் எஸ் என்றார். பவ்வியமாய்ப் படிவத்தைக் கொடுத்ததும் உடனடியாய் ஓரத்தில் கிறுக்கி ஓரம் கட்டி, ஓகே அட்டை பத்துநாளைக்குள் வீடுதேடிவரும் இல்லாவிட்டால் என்னை வந்து பார், இப்போது ஓடு பையா என்பதுபோல் சொல்லவும், வழியக்கூட வழியின்று வெளியேறியாக வேண்டியதாயிற்று.

பிளாஸ்டிக் அட்டை வராதிருந்தால் பஞ்சாப்பைப் பார்க்க இன்னொரு வாய்ப்பு உண்டல்லவா என்று மனநாக்கு சப்புக் கொட்டினாலும் சம்பளம் தாமதமாகிவிடுமோ என்கிற பயமும் வயிற்றைக் கலக்காமல் இல்லை. மறு ஜொள்ளுக்கு வாய்ப்பின்றி சர்தாரினியின் வாக்கு தப்பாது அட்டை வந்தேவிட்டது. ஆனால் அதை ஏடிஎம்மில் நுழைத்தபோது சம்பளம் மட்டும் வரவே இல்லை.இயந்திரத்திற்குப் பக்கத்திலெயே ஒட்ட்ப்பட்டிருந்த நம்பர்களுக்கெல்லாம் மாற்றிமாற்றி ஃபோன்போட்டால் சர்வர் டவுன் ஆகி இருக்கலாமிலிருந்து தொடங்கி ஏகப்பட்ட காரணங்களை வெவ்வேறு நம்பர்கள் வெவ்வேறு குரல்களில் கூறின. இந்தியா அணுகுண்டு சோதனை செய்ததை அமெரிக்கா கண்டித்ததுகூட ஒரு காரணமாய் சொல்லப்பட்டதாக நினைவு. திங்கட்கிழமை காலையில் வங்கி அலுவல் நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட கிளையை அணுகவும் என்பதுதான் நடைமுறை யதார்த்தமாய் சொல்லப்பட்ட பதில். இது சொல்லாமலே தெரிந்ததுதானே. இரண்டுநாள் சம்பளமும் இல்லாமல் தொலைபேசிக்கு அலைபேசியில் அடித்து, இருந்த சேமிப்பையும் இழந்ததற்கு ஆறுதலாய் சர்தாரிணி தரிசனம் என்று அங்கு சென்றால், ஏதோ நாம்தான் குற்றமிழைத்துவிட்டதுபோல் இப்போது ஏடிஎம்மில் முயற்சியுங்கள் பணம் கிடைக்கும் என்ற கறார் பதில்.

என்னதான் காரணம் என்று துருவியதில் கிடைத்த அமரிக்கையான பதில், இப்போதுதான் அட்டைக்கு இயக்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் அனுப்பி வைக்கப்பட்ட அட்டையை வைத்து முதல் சில தினங்களுக்கு பணம் எடுக்க முயற்சிக்காமல் நாக்கு வழிக்க மட்டும் உபயோகித்திருக்க வேண்டும் போலும். அதுவரை சுண்டி இழுத்த பஞ்சாப் சர்தாரிணி அப்போது சோளைக்கொள்ளை பொம்மைக்கு சுரைக்குடுக்கை தொங்கவிட்ட காலிஸ்தான்காரியாய்த் தெரிந்தாள்.

ஏற்கெனவே அம்மாவை ஆஸ்பித்திரியில் சேர்த்திருந்தபோது இதே போன்ற இயக்க அனுமதிக்காத பிரச்சனை காரணமாய் இந்த வங்கிமேல் இருந்த நாவடிக்கசப்பு நிரந்தரமானதுதான் மிச்சம்.

எந்த பில்லி சூனியத்திற்கும் அசையாத அலுவலக அதிஉயர் பிசாசு சென்னையில் காலக்கெடு முடிகையில் பதவிஓய்வும் ஓய்வூதியமும் கொஞ்சம் கூடக் கிடைக்கும் என்று வேறு கிளைக்குத் தாவியது.

அலுவலகத்தின் அதிஉயர் அதிகாரப் பிசாசு வெளியேறியபின் குட்டிப் பிசாசுக்குக் கொஞ்சநாள் வரை காலி டப்பாவின் பெருங்காய வாசனை இருந்தது. அதுவும் மாற்றலாகிய பின்புதான் விஷயம் மெல்லக் கசிந்தது. குட்டிப் பிசாசு கடைசிவரை வங்கியில் சேமிக்குப் கணக்கையே திறக்காமல் கை நீட்டிப் பணமாகத்தான் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்திருக்கிறது.

கம்யூனிஸ்டுகளைத் தாக்கி எழுதியது என்று ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணைக்கு காலாகாலமாய் முத்திரை குத்தப்படுகிறது. ஆனால் “எல்லா விலங்குகளும் சமம். சில விலங்குகள் மற்றைவற்றைவிட அதிக சமம்.” என்று அவர் சொன்னது எந்த அதிகார மையத்திற்கும் எவ்வளவு கச்சிதமாய்ப் பொருந்துகிற சத்தியம்.