18 December 2011

இளையராஜாவும் எம்டிஎம்மும்

எந்த சம்பந்தமும் இல்லாத வித்யாசங்கர் நம்பிராஜன் நக்கீரன் என எல்லோரையும் லும்பன்கள் என்று வசைபாடவேண்டிய அவசியம் என்ன? வித்யாசங்கரை விக்ரமாதித்தனைக் கடைசியாகப் பார்த்தது 95 புத்தகக்கண்காட்சியில் என்று நினைக்கிறேன். அப்புறம் தொடர்பே இல்லை. திரும்ப எழுதவந்தபின் 2011ல்தான் வித்யாசங்கருடன் சாட்டிலும் விக்ரமாதித்யனுடன் கைபேசியிலுமாகத் தொடர்புவந்தது.

ஒவ்வொருவரும் அவரவர் வயிற்றைக் கழுவ எதையெதையோக் கழுவ வேண்டி இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். ட்விட்டரில் என்னை அடிக்க  அடுத்தவர்களின் வயிற்றுப்பாட்டைப்போய் பயன்படுத்துவது என்ன நியாயம்? 

mdmuthu M.D.Muthukumaraswamy @maamallan எது முள் செடி? விக்கிரமாதித்யன், வித்யாஷங்கர் வளர்த்த நக்கீரன் பத்திரிக்கை பாணியிலுள்ள உங்கள் கட்டுரைத் தலைப்புகளை என்ன சொல்வது?

அறிவாளித்தனமாய் அயல்நாட்டு நிறுவனங்களைக் கழுவிவிட்டபடி டாலரால் வயிறுகழுவும் அதிருஷ்டம் எத்துனைப்பேருக்கு வாய்த்துவிடக்கூடும்.

mdmuthu M.D.Muthukumaraswamy @maamallan தமிழ் உரை நடையின் lumpenizationஇக்கு உங்கள் நண்பர் குழாம் போலவே நீங்களும் பங்களித்து வருவது ஆச்சரியமில்லை.

மாடன் மோட்சம் - சிகரமா தகரமா என்கிற தலைப்பு என்ன டெக்ஸாஸ் வட்டாரவழக்கிலா எழுதப்பட்டது. அடுத்தவர்களிடம் அதைப் பாராட்டியபோது அதன் லும்பன் முகம் தெரியவில்லையோ? அங்கே அடித்துத் துவைக்கப்பட்டது ஜெயமோகனின் டவுசர். இங்கே அவிழ்க்கப்பட்டது பண்டித சிரோமணியின் பர்முடாஸ் எனவே இது நக்கீர நடையாகிவிட்டது.

நடமாடும் பல்கலைக்கழகம் என்று, பல்லாண்டுகளாய் அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் திமுகவை விட்டு விலகியதும் நடமாடும் நர்சரி ஸ்கூலாய் ஆக்கப்பட்டதைப் போலல்லவா இருக்கிறது நக்கீரனாய் இருந்தவன் நக்கீரன் பத்திரிகை நடையனாய் ஆகிவிட்டதாய்ச் சொல்வது. 

எம்டிஎம் திரட்டிய கானாப் பாடல் களைப் பாடிய மயிலை வேணு நடைபாதைகளில் வாழ்ந்தவரா அல்லது அடையாறு போட்கிளப்பில் வசித்தவரா? தெருவோரக் குடிமக்களான லும்பர்களுக்காகப் பாடியவரா இல்லை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் பட்டுச்சேலை சரசரக்கும் மாடர்ன் டே மாமா மாமிகளுக்கு கச்சேரி செய்தவரா? இந்திய எதிர்கலாச்சாரத்தைப்  பேணிக்காப்பதற்கென்றே பிறவியெடுத்தவருக்கு லும்பன்கள் எப்படி இழிந்தோராய் ஆகமுடியும்? மாமல்லனுடன் சண்டையா மல்லாந்து படுத்தபடி வானத்தை நோக்கியும் எச்சி துப்பலாம்.

தலைப்பில் இளையராஜா என்று போட்டுவிட்டு எம்டிஎம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் எப்படி?

1991 தீபாவளி வெளியீடாக P.வாசு இயக்கத்தில் கிழக்குக்கரை சின்னத்தம்பி என இரண்டு படங்கள் வெளியானதாக நினைவு. இரண்டிலுமே நாயக நாயகியாக பிரபுவும் குஷ்புவும் நடித்திருந்தனர். கிழக்குக்கரைக்கு செய்யப்பட்ட விளம்பரங்களில் கால்பங்குகூட சின்னத்தம்பிக்கு செய்யப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம். வெளியான சிலதினங்களிலேயே கிழக்குகரை வந்த சுவடையேக் காணவில்லை. ராஜாவின் பாடல்களால் , சின்னத்தம்பி தமிழகத்தையேப் பயித்தியமாக அடித்துக்கொண்டிருந்தது.பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் இயக்குநர் வாசுவை தற்செயலாய் சந்திக்க நேர்ந்த்போது,

என்னப்பா படம் நல்லா ஓடுதுன்னு கேள்விப்பட்டேன் என்றாராம் ராஜா

ஆமாங்க. ரொம்ப நல்லாப் போவுது என்றாராம் வாசு

இப்புடி ஓடும்னு தெரிஞ்சிருந்தா இன்னும்கொஞ்சம் நல்ல ட்யூனாப் போட்டுக் குடுத்திருப்பேனே என்றாராம் இளையராஜா.

படிப்பாளிகளும் படிப்பும் என்கிற ஒரே கட்டுரையில், பண்டித கனவான் கோட்டுசூட்டையெலாம் கிழித்துக்கொண்டு சுக்குநூறாய் உடைந்து ட்விட்டுக்களாய் சிதறி புலம்பத்தொடங்கிவிடும் கனபாடி பலசாலிதான் என முன்கூட்டியேத் தெரிந்திருந்தால், கப்டன் கதையின் வாசிப்பு சாத்தியங்கள் பற்றிய வலிந்த எழுத்திற்கான மேற்படி எதிர்வினையை வலது கையால் எழுதியிருக்கலாமே என இப்போது தோன்றுகிறது.

இருக்கிற யானைக்காலை வைத்துக்கொண்டு அவ்வப்போது இலைமறைவு காய்மறைவாய்க் காட்டி மிரட்டல் கச்சேரி செய்து ஒப்பேற்றிக்கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம். அதைப்போய் நிஜமாகவே யானையின் கால் என நம்பி சமருக்கு இறங்கினால் இப்படித்தான் சந்திசிரித்துவிடும்.