04 January 2012

வேலை

மாலையில் போய் கண்டெய்னருக்கு சீல் வைக்கவேண்டி இருந்தது. தொழிற்சாலை இருக்குமிடம் வேடந்தாங்கலுக்கு எட்டு பத்து கிலோமீட்டருக்கு முன்பாக. செங்கல்பட்டிலிருந்து கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து கிலோமீட்டர் இருக்குமாயிருக்கும். என் வேலை அங்கே இருந்து கண்கணிப்பது. கண்காணிப்பு என்றால் கண்கொத்திப்பாம்பாக அன்று. அங்கே ‘இருந்து’ பரிசோதிக்க வேண்டும். தொழிற்சாலையின் ஊழியர் மூன்று மணிக்கே வந்து ஆவணங்களில் முத்திரைகள் இட்டு அமைதியாய் ஒரு பக்கமாய் அமர்ந்திருந்தார். எப்படியும் நான்கு மணிக்கு மின்வெட்டு உண்டு என்பதால் அதுவரை கொஞ்சம் பொறுங்கள் ஆன்லைன் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று அலுவலக வேலையில் மூழ்கினேன்.

மாதாந்திர உற்பத்தி, விற்பனைக்காய் செலுத்தப்பட்ட வரி போன்றவை எல்லாம் இப்போது ஆன்லைனுக்கு வந்தாயிற்று. அதுவும் இந்த அக்டோபர் முதல் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. ஏற்றுமதி தவிர எதன்பொருட்டும் தொழில் நிறுவனங்கள் அலுலகத்திற்கு வரவேத்தேவையில்லை.

ACES என்கிற மென்பொருளில், இங்கிங்கே தவறு செய்கிறாய் என்று ஒவ்வொரு நிலையிலும் கொடுக்கும் எச்சரிக்கைகளை சட்டையே செய்யாமல் ஓகே ஓகே என்று அழுத்தி அவசர அடியில் தொழிற்சலை ஊழியர்கள்  செய்திருக்கும் கந்தர்கோளங்களைத் திருத்துவதும் வரி விடுபடல் இருக்கிறதா எனப் பார்ப்பதுமே, பரிசீலணை மற்றும் திருத்தம் என்கிற பெயரில், மேற்பார்வை அதிகாரிக்கான பணி. அவருக்கு உதவுமுகமாய் தவறுகளைத் திருத்துவதே ஆய்வாளரின் முக்கியப் பணிகளில் ஒன்று.

சில ஆண்டுகள் முன்னால்வரை நிதி அமைச்சரின் பட்ஜெட் பேச்சில் தவறாமல் இடம்பெறும் வார்த்தையாக இன்ஸ்பெக்டர்ராஜ் இருந்துவந்தது. அனைத்து அரசுகளின் கிட்டத்தட்ட ஒரே வகையான பொருளாதாரக் கொள்கைகள் உலகமயமாதல் போன்றவை காரணமாய் 91ல் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக ’ஆய்வாள’ அதிகார ராஜ்ஜியம் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம். கடிக்க முடிகிற பழையகாலத்துப் பற்கள் இல்லை. இப்போது பல்செட் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதுகூட வாயில் வைத்துக்கொள்ள அன்று. எதற்கும் சும்மா கையில் இருக்கட்டும் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் ஆய்வாளரின் கையெழுத்து இல்லாமல் எந்தப்பொருளும் தொழிற்சாலையை விட்டு வெளியில் செல்ல முடியாது. இப்போது  முறையான அனுமதி பெறாமல் தொழிற்சாலைக்குள், ஆய்வாளர் காலே வைக்கமுடியாது. தூரத்திலிருந்தே பிள்ளையார் கோயில் கோபுரமாக கன்னத்தில் போட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். புலனாய்வு மற்றும் தணிக்கை அதிகாரிகளுக்கு மட்டுமே தொழிற்சாலைக்குள் நுழைய அனுமதி உண்டு. கணக்குவழக்கைக் கம்பெனியே பார்த்துக்கொள்ளட்டும் ஆண்டுக்கொருமுறை அரசுத்துறையின் தணிக்கையாளர் பார்க்கட்டும். பிரத்தியேகமாய் மோசடி நடப்பது பற்றிய துப்பு இருந்தால் மட்டும் புலனாய்வுப் பிரிவு போகட்டும் என்பதுதான் தற்கால நடைமுறை (யதார்த்தம் புலனாய்வுக்கு அதுவன்று என்ற போதிலும்). துறையின் மற்ற பிரிவுகளெல்லாம் விருந்தோம்பி வழிகாட்டல் அறிவுரை மற்றும் அறிவுருத்தல்கள் மட்டுமே வழங்க வேண்டும்.

எதிர்பார்த்ததுபோலவே நான்கு மணிக்கு மின்னல் வெட்டாய் மின்வெட்டு. 4.50 வாக்கில் தொழிற்சாலைக்குப் போய்க் காரிலிருந்து இறங்கியபபோது சாயுங்கால வெயிலே சுறீரென்றது.

40 அடி கண்டெய்னரில் வெறும் இரண்டு பெட்டிகள் மட்டுமே ஏறி இருந்ததைப் பார்த்ததும் பகீலென்றது. பக்கவாட்டில் இருந்த பெட்டிகளைப் பார்த்தேன். ஒன்றின்மேல் 32/60 என சுழிக்கப்பட்டிருந்தது. சர்க்கஸ் குள்ளர்கள் போல ஒன்றின்மேல் ஒன்றாய் மூன்று பெட்டிகள் ஏறி உட்கார்ந்திருந்தன. அதுபோல மும்மூன்றாய் இருந்தவை பத்து பன்னிரெண்டு இருக்கும். அவை ஒவ்வொன்றுகுள்ளும் இருப்பவை எல்லாம் வெவ்வேறு அளவுகளிலான ஷாஃப்ட்டுகள். நுட்பமான துல்லியமான் ஷாஃப்ட்டுகள், கியர் பாக்ஸுகளுக்குள்ளே இருக்கும் ஷாஃப்ட்டுகள். ஜான் நீள குறுந்தண்டாய்ப் இருப்பவை ஜப்பான் அமெரிக்கா கொரியா இத்தாலி என உலகின் விலைமிகுந்த வாகனங்களை இயக்கப்போகின்றன்.

ஏற்றுமதியாகும் பெட்டிகளில் இரண்டு சதத்தைப் பார்த்தால் போதும் என்கிறது அலுவலக வழிகாட்டல். அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்பதுபோல் நம்பிக்கை வாய்ந்த நிறுவனம். ஆரம்பத்தில் திறந்து பார்த்து சோதித்ததை எண்ணிப்பார்க்க இப்போது எனக்கே கூச்சம் வரவைக்கும்படியான நம்பகத்தன்மையை ஊன்றிவிட்ட நிறுவனம். அப்படியெனில் வந்திருக்கவே வேண்டிய அவசியமே இல்லையே. மேஜையில் உட்கார்ந்தபடியே ஏற்றுமதி வழங்கலாய், கண்டெய்னர் சீலை வந்தவரிடமே கொடுத்துவிட்டிருக்கலாமே என்பது நியாயமான கேள்விதான் என்றாலும் போய்ப் பார் என்கிறது துறையின் வழிநடத்தல் புத்தகம் போயே பார்த்துவிடுவோமே என்பதைத்தவிர அறிவார்த்த பதில் ஏதுமில்லை.

அறுப்பது தேய்ப்பது எனக் காது கிழிந்துகொண்டு இருக்கும் தொழிற்சாலை. ஆனால் ஒரு தூசு தும்பு பார்க்க முடியாது. சிஎம்சி இயந்திரங்களின் மூடியகதவுகளுக்குள்ளிருந்து உயர் ரக ஸ்டீல் தண்டுகள் குயவன்கைக் களிமண் பானையாய்க் கரைக்கப்படுகையில் குளிர்விப்பானின் குளிப்பாட்டலில் கிறீச்சிடும் குழந்தையின் இரும்புக் கதறல்

என்ன சார் முடிச்சுட்டுக் கூப்ட்ருக்கலாம் இல்லையா? ஆபீஸ்ல இன்னோரு மணி நேரம் வேலை பாத்துருக்கலாம். அட்லீஸ்ட் ஜெனரேட்டர் போட்டாச்சியும் பெண்டன்சிய முடிச்சிருக்கலாம். இங்க வந்து டைம்தான சார் வேஸ்டு.

தொழிற்சாலையின் பொறுப்பாளர் ஊழியரைத்தாண்டி முந்திக்கொண்டார். இல்ல சார் இன்னும் ஒன்னவர்ல முடிஞ்சிடும். 

ஜோக்கடிக்காதீங்க சார். கண்டெய்னர் இப்ப இருக்கற நெலமைக்கு,செங்கல்பட்டுல ஏழேகால் புடிக்க முடிஞ்சி ஒம்பது ஒம்பதேகாலுக்கு வீடுபோய் சேந்தா, இன்னக்கி முழிச்ச அதே முகத்துல நாளைக்கும் முழிக்கலாம். நீங்க வேற்.

இல்ல சார் சீக்கிரம் முடிஞ்சிடும். லெமன் டீ சாப்பிடறீங்களா? 

வேண்டாம் கூல்ட்ரிங்க் இருக்குமா பாருங்க.

அருகில் அதிகாரி போல் தோன்றிய இளைஞன் ஒருவன் குட்டிக்கிரேனை ஏற்றி இறக்கி ஒரு குட்டைப் பெட்டியை தூக்கி வைக்க அதை அசக்கி அசக்கி நடைவண்டி பழகிக்கொண்டிருந்தான். அநேகமாய் இன்றைய எனது வீடு திரும்பலை அவனே நிர்ணயிக்கப்போகிறான் என்பதை நினைக்க என் ரத்த அழுத்தம் எகிறியது.

மும்மூன்று பெட்டி அடுக்குகளை நீள அடி நாக்கில் தாங்கி நகரும் இயந்திரத்தில் எடுத்து இரண்டு மூன்று சீருடை இளைஞர்கள் இலக்கண சுத்தமாய் நடைபயில்வது போல் இழுத்துக்கொண்டு போய் இரும்பு சதுரத்தில் பெட்டிகளோடு நின்றுகொள்ள, அது லேசாகக் கமறிக்கொண்டு ஹைட்ராலிக் மெத்தனத்தில் மேலே எழுந்து கண்டெய்னருக்கு நீட்டித்த இணைப்பு தளமாய் ஆனது. கைப்பிடி தள்ளி உள்ளே போய் நடுவாந்தர இடைவெளியில் நிற்க வைத்து அடிநாக்கை உள்ளிழுத்து மெல்ல மங்கல் இருட்டிலிருந்து வெளிவந்து இரும்புச் சதுரத்தில் அவர்கள் நிதானமாய் இறங்கும்போது இன்ஜினியரிங் படித்த அதிகாரி இளைஞன் ஒன்றின் மேல் இன்னொரு பெட்டியை ஒருவழியாய் வைத்திருந்தான். அவனைப் பார்த்த என் பார்வையில் இருந்த பதற்றம் அவனுக்கு உறைத்திருக்க வேண்டும். அருகில் நின்றிருந்த செம்பட்டைப் பரட்டைத்தலை அழுக்குச் சட்டைக்காரன கையில் குட்டிக்கிரேனை ஒப்படைத்தான். அந்தப் பரட்டைத்தலைப் பான்பராக்வாயனின் கை, கிரேனைப் பிடித்ததும் சோம்பிக்கிடந்த அந்த இடமே உயிர்த்தெழுந்துவிட்டதுபோல் அப்படியொரு மாயம் நிகழத் தொடங்கியது. தான் அதிகம் நகராமல் மெஷினை மட்டும் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் நகர்த்தி சலக்கு சலக்கென சதிராடத்தொடங்கினான். குட்டைப்பெட்டிகள் சமத்தாய் ஒன்றின்மேல் ஒன்றாய் ஏறி அமர்ந்து நெட்டையாயின. அவன்தான் அன்று என்னை ஏழேகாலில் ஏற்றப்போகிற ஒரே நம்பிக்கை நட்சத்திரமாய்த் தோற்றாமளித்தான்.

படித்த இளைஞன் சனி ஞாயிறில் கவிதை எழுதக்கூடும். அந்தப் ஊத்தைவாய் பான்பராக்காரனோ கவிதையாய் வாழ்ந்துகொண்டிருந்ததாய்ப்பட்டது. அவனுக்கு அந்தப் பொருட்கள் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றன என்பது கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யோசித்துப்பார்த்தால் தெரிந்திருக்கவேண்டிய அவசியமோ அக்கறையோகூடத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. தன் வேலயில் முழு ஈடுபாட்டுடன் முழு தேர்ச்சியுடன் அவர் ஆழ்ந்திருந்தார். இலக்கியத்திற்கான என் நேரத்தை இன்றைக்கு அளிக்கும் வல்லமை அவரிடமே இருக்கிறது என்று நம்பிக்கை வைத்துக் கண்டெய்னர் லோடிங் கண் பார்வையில் இருக்கும்படியாக இருந்த கண்ணாடி அறைக்குள் போய் உட்கார்ந்து, வலைக்கணினியைத் திறந்துகொண்டேன்.