06 January 2012

புவன்னா போன பூனா

புவன்னா கவிதைப்புகழ் நண்பர் பூனா போயிருக்கிறார். 

நானும் ரவுடிதான் என்று வாலிண்டியராக ஜீப்பில் ஏறி, எல்லாரும் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்குப் போறேன் ஜெயிலுக்குப்போறேன் என்பதுபோல, பூனா போவதை சொல்லிவிட்டுப் போனதைப் படிக்க நேர்ந்தது. 

எழுத்தாளர்கள்தான் காரில் போனேன் வந்தேன் என்பதையெல்லாம்கூடப் பெருமையாய் எழுதிக்கொள்கிறார்கள் என்றால், வாலிப வயோதிக நண்பர்களுக்கு, ட்விட்டர் சந்தில் முதன்மையாய் வாசகன் என்று சொல்லிக்கொள்பவருக்கும்கூட, லேகியப் புகழ் காளிமுத்து சென்னை வருகையின் அறிவிப்பு போல, பூனாவுக்குப் போவதைத் தெரிவித்து, பூனாக்காரர்களுக்கு சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்ததைப் பார்க்க நேர்ந்தபோது நிஜ வாழ்வில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

வீட்டிலிருந்தபடியே பேசினால் டப்பிங் தியேட்டரில் போய் தானாகப் பதிவாகிவிடும் அளவிற்குக் குரல் வளம் படைத்திருந்த வி.கே.ஆர் எனப்படும் நடிகர் வி.கே.ராமசாமி ஏதோ ஒரு படப்பிடிப்பு கட்டிடத்தின் ஏதோ ஒரு தளத்தில், உள்கோடியில் இருந்த அறையில் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார். 

புனா திரைப்படக் கல்லூரியில் இருந்து,கோலிவுட்டை சுற்றிப்பார்க்க மாணவர்கள் கூட்டமாக வந்திருந்தனர். படப்பிடிப்பு தளங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவர்கள்,உள்ளே காமெடி நடிகர் ஒருவர் மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், அவரை சந்திக்க முடியுமா என சும்மா விசாரித்து வைத்தனர்.

படப்பிடிப்பு தளத்தின் வாட்ச்மேன்,செய்தியை மேக்கப்மேன் காதில் குசுகுசுவெனக் கூறி வைத்தார்.

சார்! பூனாலேந்து டூடன்ஸ் உங்களைப் பாக்க வந்துருக்காங்களாம்.

அப்பிடியா, இருக்கச்சொல்லு. ஆமா எங்கேந்து வந்துருக்காங்கன்னு சொன்னே?

பூனாலேந்து.

ஓ பிலிம் இன்ஸ்டூட் பசங்களா. சரி சரி வெயிட் பண்ணச் சொல்லு கண்டிப்பா பாக்கறேன்.

அன்று பார்த்து விக்கு சரியாக உட்காராமல் லொள்ளு பண்ணி விகேஆரை கடுப்பேற்றிக்கொண்டிருந்தது.

வெளியில் இருந்த மாணவர்கள் காத்திருப்பதில் பொறுமை இழந்துகொண்டு இருந்தனர். செய்தி உள்ளே போனது.

சார் பூனாக்காரங்க வெயிட் பண்றாங்களாம்.

கொஞ்சம் இருக்கச் சொல்லுய்யா.. இந்த சனியன் புடிச்ச விக்குக்கு இன்னிக்கி பாத்து என்னா ஆச்சி.

இன்னும் கொஞ்சம் நேரமானதும் திரும்ப வெளியில் இருந்து நினைவுறுத்தல் உள்ளே போனது. இந்த முறை படப்பிடிப்பு தளத்தின் காவலருக்கே பொறுமை போய்விட்டது. சிறிய விஷயத்திற்காக மூன்றாவது முறையாக அவ்வளவு தூரம் நடக்கவேண்டி வந்ததில் கடுப்பேறவே, மேக்கப் ரூம் வாசலில் நின்றபடியே சத்தமாக தெரிவித்தார்.

சார் பூனாலேந்து வந்தவங்க வெயிட் பண்ணறாங்க.

அதைக் கேட்டுக் கடுப்பான வி.கே.ராமசாமி, அதைவிட சத்தமாகக் கத்தினார்.

என்னமோ இவனுங்கமட்டும்தான் அதிசயமா பூனாலேந்து வந்தாப்புல குதிக்கறானுங்க. எல்லாருமே பூனாலேந்து வந்தவங்கதான்னு போய் சொல்லு போ.