22 January 2012

எண்ணிகையற்ற ஏணிகள்

நடந்துமுடிந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கியதை விடவும் வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். நின்றும் அலைந்தும் வேடிக்கை பார்த்ததைவிட உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததே ஜாஸ்தி. உட்கார விரும்பியதும் உட்கார முடிந்ததுமான ஒரே இடம் தமிழினி. வசந்தகுமாரின் அருகில்தான். அவன் 81லிருந்து நண்பன். எந்த காலத்திலும் வெளிச்சத்திற்கே வரவிரும்பாதவன். அவனது இலக்கிய ரசனைக்கும் எனக்கும் ஒத்தே வராது. பல சமயங்களில் அவனது அபிப்ராயங்கள் முட்டாள்தனமாகக்கூடத் தோன்றும். வாதத்திற்கே வராமல் கட்டைப் பஞ்சாயத்தாக ஒற்றை வார்த்தை ஒரு வரியில் அடித்துவிட்டுப் போய்விடுவான்.

புத்தகக் கண்காட்சி முடியப்போகிற சமயத்தில், மொறமொற திங்கற கொறகொற எங்கிற என்று மண்டையைக் குடைந்தபடி தெய்வீகமாய்க்  கொள்ளையடித்துக்கொண்டிருந்த உணவகம் அருகில் ஒன்பதுமணிவாக்கில் நண்பர்கள் நடுவில், இதுவரைக்கும் காவல்கோட்டம் கிட்டத்தட்ட 6000 காப்பி போயிருக்காம்ப்பா, இந்தக் கண்காட்சிக்காக மட்டுமே 3000 காப்பி அடிச்சானாம் வசந்தகுமார் என்றேன்.

அவ்வளவுதான் அதிஷாவும் யுவகிருஷ்ணாவும் பிடித்துக்கொண்டார்கள்.

அதன் விலை என்ன? 600 X 6000 எவ்வளவு? இரண்டு வருடத்தில் இவ்வளவு புத்தகம் விற்றிருந்தால் வசந்தகுமார் என்ன கார் வைத்திருக்க வேண்டும்?

யப்பா வசந்தகுமார் பொய் சொல்ல மாட்டாம்பா என்றேன். என் குரல் எனக்கே பரிதாபமாகக் கேட்டது.

அப்போதுதான் அறிமுகமான ஒருவர் சார், தூர நிண்ணு கவனிச்சிகிட்டுதான் இருந்தேன், காவல் கோட்டம் வாங்கறவங்களைவிட எடுத்துப் பாத்துட்டுத் திரும்ப வெக்கிறவங்கதான் ஜாஸ்தி என்றார்.

சார் நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும்மேல வசந்தகுமார் பக்கத்துலையே ஒக்காந்திருந்தேன். எவ்ளோ காப்பி போச்சி தெரியுமா? என்றேன் கடுமையுடன்.

என்னிக்கு சார் இன்னிக்கா?

இன்னிக்கி இல்லே நான் ஒக்காந்திருந்தது ஞாயித்துக்கெழமை அண்ணிக்கி.

ஞாயித்துக்கெழமை எல்லா கடைலையும் சரியான சேல்ஸ்தான் சார்.

போங்க சார் ஜெயமோகன் காடு நாவலை ஏழு நாள்ல எழுதி கட்டுகட்டாக் கொரியர்ல அனுப்பினதா வசந்தகுமார் சொன்னதாக் கூடத்தான் சொன்னீங்க.

ஆமா சொன்னாந்தான்.

அத நம்பறீங்களா அதே மாதிரிதான் இந்த 6000 காப்பியும். யுவகிருஷ்ணாவின் ஏளணச் சிரிப்பை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் திணறவேண்டி இருந்தது.

கடைசி நாளும் வசந்தகுமார் பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். இதுவரை 6000 என்பதை எவனுமே நம்புவதாக இல்லை என்றேன். அடுத்து 5000 காப்பி ஆர்டர் கொடுத்திருக்கிறேன், வரும்போது பார்த்துக்கொள்ளட்டும் என்றான். 

கண்காட்சியே முடிந்தாலும் அதிஷாவின் ஆறாயிரத்துரத்தல் ஓய்ந்தபாடில்லை. ஏற்கெனவே பத்ரி, புத்தக விற்பனைபற்றிக் கவலை வேண்டாம் சரியான எண்ணிக்கையைத்தான் சொல்லி இருக்கிறேன் என்று எக்ஸைல் பற்றிவேறு அடித்து விட்டிருந்தாரா, எண்ணிக்கை பற்றியோ விற்பனை பற்றியோ என்றுமே கவலைப்படாத நாம் ஏன் இவ்வளவு படுத்திக்கொள்ள வேண்டும் என்று சும்மா விட்டுவிட்டேன்.

என்றாலும் 600 X 6000 கணக்கைவிட என்னை உறுத்திக்கொண்டிருந்த விஷயம், முதலீடுதான். பொதுவாக விற்பனை விலை நிர்ணயம் என்பது, அடக்க விலையின் இரண்டரை மடங்கிலிருந்து மூன்று மடங்கு என்பதுதான் நடைமுறை. 30% தயாரிப்பு செலவு 35% விநியோக செலவு 10% ஆசிரியருக்கான ராயல்டி 25% பதிப்பகத்தின் லாபம் (நிகர லாபம் என்று சொல்லவியலாது காரணம் விற்று முடியும் காலம் வரையிலான வட்டியை எவன் கணக்கில் ஏற்றுவது? இதுபோக ஓரளவு ஈடுகட்டலாக இருக்கக்கூடியது நூலக ஆணையாகக் கிடைக்கும் மொத்த விற்பனை. நூலக ஆணையே இல்லாத கடந்த மூன்றுவருட வறட்சி முடக்கத்தை எதில் எழுதுவது?) புத்தகத்தின் பிரபலம் நிறுவனச் செலவு தயாரிப்பின் தரம் மற்றும் எண்ணிக்கை காரணமாக பதிப்பகத்திற்குப் பதிப்பகம் அடக்கவிலை நிர்ணயம் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக்கூடும்.

ஆகவே 650 ரூபாய் விலையுள்ள காவல்கோட்டத்தின் அடக்கவிலை 260 என்று வைத்துக்கொள்வது ஓரளவு சரியாக இருக்கக்கூடும்.

250 X 3000 = 7,50,000/- இவ்வளவு முதலீடு ஒரே ஒரு புத்தகத்திற்கு செய்வதென்றால்...

புத்தகக் கண்காட்சியை ஒட்டியே 90% புத்தகங்களைப் பதிப்பகங்கள் அச்சிடுவதன் ரகசியம் கிட்டத்தட்ட முதலீடின்மை என்பதுதான். முன்பணமாகக் கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதியை கண்காட்சியில் ‘விற்று’ கொடுத்துவிடலாம் என்பது பதிப்பக - அச்சக பரஸ்பர வியாபார வசதிக்கான ஒப்பந்தம் என்கிறபோதிலும் ஏழரை லட்சத்திற்கு ‘ரிஸ்க்’ என்பது சற்று உறுத்திக்கொண்டே இருந்தது. டிசம்பர் 22 அன்றே காவல் கோட்டத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துவிட்டதும் தமிழினிக்குக் கூடுதல் தைரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதே சமயம் கண்காட்சிக்கு முன்னால் காவல் கோட்டம் 1000 காப்பி அச்சுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டதாக அச்சகத்தின் மேற்பார்வையாளர் சொன்னதாக நம்பத்தகுந்த வட்டாரத்துத் தகவல் வேறு தடுமாற வைத்தது. அச்சக மேற்பார்வையாளருக்கு பொய்சொல்லவேண்டிய அளவிற்கு என்ன இலக்கிய அசூயை?

அடித்ததே ஆயிரம்தானென்றால் கண்காட்சிக்கு மூவாயிரம் காவல் கோட்டங்கள் எப்படி வந்திருக்க முடியும்? இது என்னடா திருவல்லிக்கேணி உத்ராதி மடத்தில் உலவும் ராகவேந்திர சுவாமிகளின் ஆயுளைச் சொன்ன ஜோசியக்காரர்கள் கதை போல இருக்கிறதே என்று திகைத்துவிட்டேன்.

ராகவேந்திர சுவாமிகளின் ஜாதகத்தைப் பார்த்த மூன்று ஜோதிடர்கள் அவரது ஆயுளை மூன்று விதமாக 300, 700, 100 என்று சொன்னார்களாம். கூடி இருந்தோர் நகைக்கத் தொடங்கிவிட்டனராம். சுவாமிகள் சொன்னாராம் மூன்றுமே சரிதான் என்று. பெருசுகள் இப்படி ஏதாவது கொண்டக்க முண்டக்க புதிர் போட்டு எல்லோரையும் திகைக்க வைத்துப் பின்னர் மென்புன்னகை தவழ முடிச்சை அவிழ்த்தால்தானே தத்துவம் கமழ அம்சமாக இருக்கும்.

300 வருடங்களுக்கு பிருந்தாவனத்திற்குள் பூத உடலுடன் நான் இருப்பேன்.

700 வருடங்களுக்கு நான் எழுதிய புத்தகங்கள் இந்த பூமியில் இருக்கும். (அப்புறம் புத்தகம் போய் கிண்டில் வந்து அச்சு ஆர்டர் எண்ணிக்கைப் பிரச்சனையே இருக்காது என்று அன்றே சொல்லி இருக்கிறார்)

1000 வருடங்களுக்கு என் புகழ் இந்த பூமியில் நிலைத்து நிற்கும். (வரலாற்றைத் தாண்டி என் புகழ் இருக்கும் என்று ஸ்ரீமான் ஜெயமோகனைப்போல அள்ளிவிட முடியாமல் என்ன ஸ்ரீயோ?)

மேற்கூறிய ஆன்மீக சமாளிப்பாய் இல்லாமல், பதிப்பாளர் அச்சகம் இருவர் சொல்லும் எண்ணிக்கைகளும் உண்மையாக இருக்க ஒரே சாத்தியம்தான் உண்டு. 3000 பிரதிகளை மூன்று நான்கு அச்சகங்களில் அச்சிட்டிருக்கலாம். இதிலும் பெரிய ஆச்சரியமில்லை. குறைந்த அவகாசத்திற்குள் நிறைய பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகங்களைத் தயாரிக்க பெரும்பதிப்பகங்கள் சாதாரணமாக செய்கிற காரியம்தான் இது. பெரும்பாலும் இரண்டாவது பதிப்பே வெளியிடாத தமிழினியும் ’எண்ணிக்கை’ யில் பெரிய பதிப்பக வரிசையில் சேர்ந்துவிட்டது போலும்.

ஒரு பதிப்பகத்தின் அம்மையார் 3000 பிரதிகள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் விற்றதாகச் சொல்ல, அதே பதிப்பகத்தின் ஐயாமார் அதே புத்தகம் 400 காப்பிகள் விற்றிருக்கிறது நல்ல சேல்ஸ் என்று மகிழ்ச்சியோடு சொல்வதில் அறம் தேடி என்ன ஆகப்போகிறது?

இது என்ன கிசுகிசுப்பு பாணி என்கிறீர்களா? இது இவ்ளோ பெருசு அது அவ்ளோ பெருசு இது இவ்ளோ போச்சு அது அவ்ளோ போச்சு என்று அவனவனும் அடித்துவிடுவதெல்லாம் கிசுகிசு கிளுகிளுப்பு வியாபாரமில்லாமல் வேறு என்னவாம்? 

பதினெட்டாவது அட்சக்கோடு எவ்வளவு வருடத்துக்கு முன்னால் வெளியான நாவல். மெளனி எழுதுவதை நிறுத்தி எவ்வளவு காலங்களுக்குப் பின் இறந்தார். அவர் இயற்கையெய்தியே எவ்வளவு வருடங்களாகிவிட்டன. இருந்தும் பகட்டு ஆரவாரங்கள் ஏதுமின்றி புதிய பதிப்பில் பதினெட்டாவது அட்சக்கோடு 280ம் மெளனி சென்ற வருடம் 300ம் இந்த வருடம் 180ம் ஜி.நாகராஜனின் மொத்த ஆக்கங்கள் ஆங்கிலம் உட்பட 100ம் (இரண்டு நாவல்களும் சிறுகதைகலும் ஏற்கெனவே தனித்தனியாக சந்தையில் இருப்பவை)சிலிர்ப்பு என்கிற தி.ஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் மூன்று பதிப்புகள் விற்பனையாகி (இவை ஏற்கெனவே மொத்த தொகுப்பாய் ஐந்தினையில் வெளியாகியிருந்தும்) நான்காவது பதிப்பாய் வந்திருப்பதென்பது எவ்வளவு பெரிய விஷயம். இவற்றை வெளியிட்டதோ அதிக விலை வைக்கிறதென்பதற்காகக் காசு என கிண்டலடிக்கப்படும் பதிப்பகம். நவீன தமிழ் இலக்கியத்தின் வேரும் விழுதுமான இந்த எழுத்தாளர்களுக்கு இணையத்தின் வாசனையாவது  தெரியுமா?இவர்களுக்கு என்று எவ்வளவு விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன? மெளனிக்கும் ஜி.என்னுக்கும் எந்த அகாதெமி என்ன பரிசு கொடுத்தது? இவர்களை வாங்கியவர்களில் பெரும்பாலோர் குட்டிப் பசங்கள் என்பதில் இருக்கும் செய்தி என்ன?

விளம்பரமும் விற்பனையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாயிற்றே. உண்மைதான் யார் இல்லை என்றது?

சந்து பொந்துக்குள் வெறும் தட்டியில் பெயர்ப்பலகை வைத்திருக்கும் உணவகங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பது எப்படி? ஏகோபித்த ஆதரவு வரலாறு காணாத வெற்றி என்று போஸ்டரடித்து சினிமாக்களையே ஓட்ட முடியாதபோது, வெறும் எண்ணிக்கையக் கூட்டிச்சொல்லியா இலக்கியத்தை விற்றுவிட முடியும்? அல்லது விற்பனை எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கக்கூடியதா தரம்?

இலக்கியம் கூவி விற்பதல்ல, தேடி வாங்குவது. வாசக ருசியால் பரவுவது, வாய்க்கு ருசியாகத் தந்தால் தட்டியில்கூடப் பெயர் தேவையில்லை என்பதே என்றைக்குமான சத்தியம்.

தமிழில் இலக்கிய வெற்றி என்பது தரத்திலிருந்து நகர்ந்து, எண்ணிக்கையின் ஏணியில் ஏறத்தொடங்கியது எப்போது? இதில் இணையத்து நுணிப்புல் மேயலின் பங்கு என்ன?