17 August 2011

பிம்பத்தின் பேரோசை


fromnagashanmugam balamani      *****@gmail.com
tomadrasdada@gmail.com
dateTue, Aug 16, 2011 at 5:59 PM
subjectஏழர என்கிற நக்ஸலைட் முகமூடிக்கு பகிரங்க சவால்!
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

hide details 5:59 PM (11 hours ago)

dear sir
i am regularly reading your blog and i admire for your courage,integrity,boldness and i salute you as a fellow citizen
for your crusade against corruption.
your service required for both Tamil modern literature and government.
i remember once writer sujatha answered for question like this.
q: what do you think about un corrupted officers in govt dept?

ans: PROTECT ENDANGERED SPICES.
keep up your good work.
thanks
regards
naga shanmugam
coimbatore

அன்பான நாக ஷண்முகம், 

நுங்கம்பாக்கத்தில் எமது பிரதான அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வருமான வரி அலுவலகத்தில்,கலை நிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தாளர்களை வரவழைத்துப் மரியாதை செய்து பாராட்டும் கூட்டங்கள் என நடக்கும். ஒருமுறை சுஜாதா அழைக்கப்பட்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் என்று அவரது தீவிர வாசகர்களான நமது அலுவலக சக ஊழியர்கள் சொல்லக் கேள்விப்பட்டது..

ஜிப்பா ஜோலனாப்பையுடன் திரிந்த காலத்தில் இருந்தே எட்டாத காயாக நாமிருப்பதான நினைப்பின் காரணமாய் அலுவலகக் கலை எழுச்சிக் கலாச்சாரம் நமக்கு எட்டிக்காய். அடுத்த அலுவலகம் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அப்பன் செத்த கருணை காரணமாய் கிடைத்த வேலையில், பிரதான அலுவலகத்தில் சேர்ந்த ஆறே மாதத்தில் அவன் என்ன ”ட்ரேட் யூனியனிஸ்ட் போல எதிர் கேள்வி கேட்கிறான்” என ஈரோடுக்கு ’காகிதத்தில் வராத’ தண்டனை மாற்றலுக்கு ஆளான பெருமை வாய்த்தவன்.

கலைத்திமிர் தலைக்கனமெல்லாம் வடிந்து,நிதர்சனம் நெற்றிப்பொட்டில் அறைய, ஊர்சுற்றிய காவியுடை களைந்து, தடுமாறிய நிலை சரியாகி, ஈரோடில் இருந்து, அம்மா தனித்திருக்கும் அனுதாப அலையில் ஆறு மாதத்தில் மெட்ராஸ் திரும்ப நேர்ந்தது.

எல்லோராலும் தங்கம் எனத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்படுபவரும் பளபளத்த பிஸ்கட்டுகளை சாப்பாட்டுக் கேரியரிலேயே விமானத்தில் கொண்டுவந்து சாப்பிட்டவர் எனக் கிசுகிசுக்கப்படும் சர்வ ஊழிய சுபிட்சியான அமரராகிவிட்ட அந்த அதீத உயர் அதிகாரியிடம், எந்த அலுவலகத்தில் நரசிம்மனைப் போஸ்ட் செய்வது? என்கிற கேள்வி எழுந்தபோது, சொன்னதாக நமக்குப் பட்சிகளால் சொல்லப்பட்ட முத்திரை வாக்கியம்.

என் முகத்தில் முழிக்காத வண்னம் அந்த நாயை எந்த இடத்திலாவது போடுங்கள்.

ஆக நமக்கும் அதிஉயர் அதிகாரிகளுக்கும் நமது பவ்விய சுபாவம் காரணமாக அவ்வளவு பாந்தமான உறவு. கீழ்நிலை குமாஸ்தாவாய் இருந்த காலத்தில் இருந்தே இரண்டு மூன்று படிநிலைகள் மேலே இருக்கும் உயர் அதிகாரிகளுடன் சமரில் ஈடுபடுவதே நமக்கு கெளரவம் சேர்க்கும் காரியம் என்கிற கொள்கையைக் கடைபிடித்து வருகிறோம். எனவே முக்கிய அதிகாரிகள் புழங்கும் பிரதான அலுவலக வளாகத்திற்குள் நம்மை வைத்துகொள்வதே அபூர்வம். ஆகையால் பிரதான அலுவலகத்திற்கு அடுத்திருக்கும் வருவாய்த்துறையில் நிகழ்ந்ததாய்க் கூறப்படும் கீழ்க்கண்ட சம்பவம் கேள்விப்பட்டதே அன்றி நேரடியாய்ப் பார்த்தது இல்லை.

வருவாய்த்துறை கலை நிகழ்ச்சிகளின் பகுதியாய்க் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுஜாதா கலந்துகொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.

கேள்வி: நீங்கள் ஏன் புனைப்பெயராக பெண் பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில்:பெண்பெயரில் எழுதுவதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது இல்லையா.கதைகள் பிரசுரிக்கப்படவும் வாசிக்கப்படவும் ஆரம்பத்தில் கொஞ்சம் உபயோகமாக இருக்கலாம்,போக மனைவியையும் சந்தோஷப்படுத்தியதாக இருக்கும் என்று வைத்துக்கொண்டேன்.

ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது.

கேள்வி:சார் உண்மையான காரணம் வேறு ஏதாவது இருக்கும் சொல்லுங்களேன்.

பதில்: வருவாய்த்துறை அதிகாரிகளாக இதைப் பார்க்கமாட்டீர்கள் என்று உறுதியளிக்கிற பட்சத்தில், நண்பர்களிடையில் உட்கார்ந்திருக்கிறேன் என்று நம்பி உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். புனைப்பெயரில் எழுத உங்கள் துறையும் ஒரு காரணம் என்றார்.

வெடித்துக் கிளம்பிய சிரிப்பொலி வெளியை நிறைத்தது. 

தீவிரமாக எடுத்துக்கொண்டால் இது சிரிக்கிற விஷயம் இல்லை. ஆனால் நாம் யாருமே நட்டு போல்ட்டு போட்டுக்கொண்டு நெட்டுக்குத்தாக நடக்க, இயந்திரங்கள் இல்லை அல்லவா?

அமிதாப்புக்குப் பத்துக் கேள்விகள் என தினமும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஜெத்மலானி கேள்வியாய்க் கேட்டுக்கொண்டிருந்த நேரம். அமிதாப் சார்பாக யாரோ ஒரு காங்கிரஸ்காரர் ஜெத்மலானியைப் பார்த்து,

‘நீ என்ன யோக்கியமா? வக்கீல் தொழிலில் வாங்குகிற மொத்த ச்ம்பளத்திற்குமா வருவாய் வரி கட்டுகிறாய்’ என்று கேட்டார்.

அதற்கு ஜெத்மலானியின் பதில் என்ன தெரியுமா? உங்கள் தலைவர் ராஜீவை விடவும் அமிதாப் பச்சனை விடவும் அவர் தம்பி அஜிதாதாப் பச்சனைவிடவும் நான் அதிக வரி கட்டுகிறேன் என்றுதான் கூற முடிந்தது. வக்கீலிடமும் டாக்டரிடமும் உண்மையை மறைக்கக்கூடாது என்பது செல்பவனுக்கு மட்டுமே சொல்லப்பட்ட வார்த்தைகள்..

பொதுவெளியில் ஊழலுக்கு எதிராய்க் குரல் கொடுக்கும் தொழிலதிபர்கள் பலரும், சொந்தத்தொழில் என்று வருகையில், அல்லது பெரிய நிறுவனங்கள் பலவும், தவறாக எடுத்துப் பயன்படுத்திய வரி கண்டுபிடிக்கப்பட்டதும் உடனே ’நேர்மையாக’க் கழித்துவிடுவார்கள் ஆனால் பயன்படுத்திய காலத்திற்கான வட்டியைக் கட்டச் சொன்னால் (வழக்கமாய் அது சில லட்சங்களில் இருக்கக்கூடும்) அதைக் கட்டாமல் தவிற்க ஏதேனும் ‘மார்க்கம்’ உண்டா என்று தழுதழுக்கத் தொடங்கிவிடுவதைக் காண்பது அன்றாட அனுபவம்.

சேவைவரித்துறையில் புலனாய்வுப் பிரிவோ தணிக்கைப் பிரிவோ எதுவானாலும் ஆடிட்டர்கள் கையிலேயே ஆதிக்கம். இவ்வளவு லட்சத்திற்கு இதை முடித்துக் கொடுத்தேன் அவ்வளவு லட்சத்திற்கு அதை முடித்துக் கொடுத்தேன் என்று சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து கற்பழிக்கத் தாயாராய் இல்லாதிருப்போரை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் கற்பிழக்கும் அதிகாரி மட்டுமே கல்லடி படுகிறான். வன்புணர்வு நாட்பட நாட்படப்பழகி இன்றைக்கு யாரேனும் வன்புணர வரமாட்டார்களா என்கிற ஏக்க்கமாய் மாறிவிடுகிறது.

உதிரிப்பணத்தில் ஊரப்பட்ட வகை உண்டு. நல்லமுறையில் பரிமாறும் சர்வருக்குக்கும் பெட்டி தூக்கி வரும் ரூம்பாய்க்கும் பாராட்டுதலாய்க் கொடுக்கப்படுவதெல்லாம் லஞ்சத்தில் சேர்த்தியா? தண்டிதண்டியான வண்டிகளை நெஞ்சு வலிக்க, ஓட்டல் வாயிலில் தூக்கி நகர்த்தி வழி ஏற்படுத்திக் கொடுப்பவனுக்குக் கொடுப்பதையும் அதில்தான் சேர்ப்போமா? இல்லை முதலாளிதான் உனக்கு இடமும் கொடுத்துச் சோறும்போட்டு சம்பளமும் கொடுக்கிறாரே, வண்டியை நகர்த்துவது உன் வேலை அதற்கெதற்கு நான் காசு தரவேண்டும் என்று கேட்கிறோமா? இல்லை அதை பிச்சையிடுவதாய்த்தான் நினைக்கிறோமா?

சலுகைகள் பலவிதம் அதிகார அனுபவிப்புகளோ அநேகம். காசையேக் கையாளாமல் எவனோ செலவழிக்க ஒட்டு மொத்த வாழ்வையும் வாழ்ந்து தீர்க்கும் நேர்மையான அதிகாரிகள் எவ்வளவுபேர் இருக்கிறார்கள் தெரியுமா? அவர் பெண்டாட்டியை அவர் சம்போகிக்க அடிமையிடம் செலவுக்கணக்கை நேர் செய்துகொள்ளும் அதி உயர் அதிகாரிகளும் இதில் அடக்கம்.

உம்மா கூட சும்மா கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.

மொரார்ஜி தேசாய் பற்றி மூத்திரக்குடியிலிருந்து முன்கோபி என்பதுவரை ஆயிரம் குறை சொல்லலாம் ஆனால் ஊழல்காரர் என்றோ லஞ்சம் வாங்கியவர் என்றோ யாருமே சொல்ல முடியாது.

பிரதமர் பதவி போனபின் சிலகாலம் கழித்து அவரும் சந்திரசேகரும் தில்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினர். அவர்களை அழைத்துச்செல்ல வரவேண்டியவர்கள் வரவில்லை. அம்போவென நின்றிருந்தவர்களை அடையாளம் கண்டு சீந்தக்கூட ஆளில்லை. கடைசியாய், அவர்களே சற்றுத் தொலைவில் தெரிந்த நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு டாக்சியை மெதுவாக அணுகிக் கட்சி அலுவலகம் செல்லவேண்டும் என்றார்கள்.

பொதுவாக சவாரிக்கு வருபவன் சட்டமாய் ஏறி உட்கார்ந்து இடம் சொல்லிப் போவென்றல்லவா சொல்வான் என டாக்சிக்காரருக்கு, நிழலாய் ஏதோ தட்டி இருக்கவேண்டும். கறாராய் வந்தது கேள்வி.

காசிருக்கா ஐயா?

இருவரிடமும் பர்ஸே இல்லை.

சுவாரசியக் கற்பனை இல்லை 80களில் ஹிண்டுவிலோ எக்ஸ்பிரஸிலோ வந்த செய்தி இது. அவர்களுக்குப் நேரடியாகப் பணத்தை செலவழிக்கும் பழக்கம் போயே பலவருடம் ஆகிவிட்டிருந்திருக்க வேண்டும்.

பணத்தை எப்போது நம் கையால் தொட்டு செலவழிக்காமல் வாழ முடிகிறதோ அப்போதுதான் நம்மைப் பெரும்பணக்காரர் என்று சொல்லிக்கொள்ள தகுதி உடையவர்கள் ஆவோம். அந்த நிலையை எத்துனை பேரால் கற்பனை செய்ய இயலும்.

பணம் அச்சுவடிவில மட்டுமே உள்ளதன்று. அதற்குப் பல்வேறு ரூபங்கள் உண்டு. அதன் உச்சபட்ச உருவமே அதிகாரம்.

அதிகாரமற்ற சாமானியர்களில் ஓஸியை உவக்காதவர்கள் அபூர்வம் அல்லவா? ஆனால் ஒவ்வொருவ்ருக்கும் ஆட்டோக்காரன் மட்டும்தான் அயோக்கியன்.

இனாமுக்குக் கைமாறாய் நாட்டின் இரத்தம் எவ்வளவு குடிக்கப்படுகிறது என்பதை வைத்து அன்பான முத்தமா வண்புணர்வு லஞ்சமா என்று நிர்னயிப்பது ஓரளவிற்கு நியாயமான அளவுகோலாய் இருக்கும்.

அலுவலக நேரத்தில் ஓஸி இண்டர்நெட்டில் வேலைக்கு இடையில் இளைப்பாறிக் களைப்பாற்றிக் கொள்வதான பாவனையில் களப்பணியில் ஈடுபட்டு நாட்டின் இறையாண்மை உட்பட அனைத்தையும் கழுவிலேற்றும் நக்ஸலைட்டுப் புரட்சியாளர்கள் வாழும் இணையபூமி இது.

சினிமா திரைக்கதை விவாதங்களில் பங்கெடுத்து செக்கில் வாங்கும் சம்பளம் கூட வருமானக் கணக்கில் வராமல் தப்பிக்க, அரசாங்கத்தால் கணக்காயராய் சான்றளிக்கப்பட்டவர் கறை ஏற்படுத்திக் கொள்ள,தன்கையை சுத்தமாய் வைத்துக்கொண்டிருப்பதான ஆன்மபோதத்துடன் அகப்பட்டதின் மீதெல்லாம் அசராமல் முத்திரை குத்தும் புனிதர்கள் வாழும் பூமி இது. இங்கேதான் வெற்றுத்தாளில் சம்பந்தமில்லாத தொகைக்கு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி வாங்காத சம்பளத்திற்குக் கையெழுத்துப்போட்டுக் கொடுக்கும் வருங்கால இயக்குநர்களும் இருக்கிறார்கள்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வாங்கும் சம்பளத்தில் இருந்து கட்டும் வரி நாட்டு மக்களுக்கா சென்று சேருகிறது அரசியல்வாதிதானே அடித்துக்கொண்டு போகிறான் என்கிற அற்ச்சீற்றத்துடன் கார் முதல் கம்பளம் வரை அலுவலகக் கணக்கிலேயே வாங்கிக்கொள்ள, அதை நிறுவன செலவுக் கணக்கில் கழித்துக் கொண்டு கணக்கில் கம்மி சம்பளம் வாங்குவதற்குப் பெயர் என்ன?

ரசீதே இல்லாமலும் அல்லது வாங்கிக்கொள்ளாமலும் பெரும்பாலான வியாபாரப் பரிவர்த்தனை, துண்டுச்சீட்டில்தான். கார்பன் காப்பிகூட இல்லாத துண்டுச்சீட்டுகள். கணினி ரசீது என்பதால் இரண்டாவது கணக்கு இல்லை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

செலவே செய்யாமல் செலவுக் கணக்கு எழுதுகிற நிபுணத்துவதிற்காகவே கடுமையான பயிற்சி எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடல்கடந்து சேமிக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவதுபோல என்ன ஒரு நாடகம். கிழித்துப் பார்த்துக்கொண்டால் குருதியின் நிறம் அவ்வளவு ஒன்றும் நல்ல சிவப்பில் இல்லை என்பது மனசாட்சியின் கண்ணை உறுத்தக்கூடும்..

இரண்டு மூன்று மாடிக்கு உடம்பைத் தூக்கிக் கொண்டு ஏறுவதே சிரமாக இருக்கையில் இவ்வளவு பாரமான நீர்க்குடுவையை சுமந்து வருகிறானே என குடுவையின் விலைக்கு மேலாகக் கொடுக்கப்பட்ட உபரிக்காசை வாங்க மறுக்கும் அண்ணாச்சிக் கடைப்பையனைப் பார்த்து குறுகிக்கூசும் நிலையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் கோடிகளில் ஒன்று எப்படி பாராட்டுக்கு உரியதாய் ஆகமுடியும். சண்டைக்காரன் என்கிற பிம்பம் காரணமாய் சமரசமே இல்லாது வாழ்பவன் என்கிற எண்ணம் உங்களுக்குத் தோன்றியிருப்பதுபோல் தெரிகிறது. மன்னிக்கவும்.