17 July 2011

கண்ணீர்ச்சுவடு

கன்னம் தொட்டு செல்லம் கொஞ்சிய
முன்பின் அறியா பெண்களின் சுகந்தம்,
பட்ட மரத்து முதல் பூவின்
மொக்கவிழ் தருணமாய்
தருணத்தின் புனித முகரலாய்
ஆவி உசுப்பி அலைகிறது.

காலரணங்களின் காய்ப்பேறிய கரங்களால்,
ஓரங்கள் செல்லரித்த பதின்ம வயது புகைப்படத்தை
அனிச்சையாய்த் தடவும்போது
ஆயுட்காலத் தவிப்பிற்கு
அக்கணத்தின் சாட்சியாய் நிற்கிறது
கன்னம் உருண்ட கண்ணீர்ச்சுவடு.