25 July 2011

ஒப்பனை

முதல் பார்வையில் முளைத்த மோகம்
காதலில் கிளைத்த ரூபம் காட்டிக்
காமத்தில் தழைத்தது.

உடல்கள் முயங்கிக் களைத்து ஓயந்தன.
மனம்திரண்டு மேலெழுகையில்
அன்றாடத்தின் வண்டல் பாசியாயிற்று.

சுத்தப்படுத்த எண்ணி சுரண்டப்போகையில்
சொல் பிறழ்ந்தது.
சுயம் தினவெடுத்தது.
கணங்கள் ரணங்களாகத் தொடங்கின.

முறிவன்றி மார்க்கமில்லை என்றானபின்னும்
பழைய பேரேட்டில் பழிவாங்கலின் பாக்கி. 
படியேறிப் படியேறி வயோதிகத்தின் வாயில் பிளக்க 
வலியறியாது விழுங்கத் தொடங்கிற்று காலம்.

ஒடுங்கிய உடலுக்கு ஆன்மீக ஒப்பனையில்
நண்பர்களாய்ப் பிரிந்த நாடக அரங்கேற்றம்.

உதட்டைச் சுழித்தபடி ஓடிக்கொண்டிருந்தது உலகம்.