29 July 2011

போதா பேதம்

குடித்துக்கொண்டிருந்த காலத்தில், குடிக்காமல் இருக்கும்போது சகஜமாய் உளறிக்கொண்டு திரிபவன், குடித்ததும் குடித்துவிட்டு உளறியதாய் ஆகிவிடக்கூடாது என்கிற தன்னுணர்வில், வாய்மூடி மெளனியாகிவிடுவேன்.
குடியை நிறுத்தியபின், நெருங்கிய நண்பர்கள் எவரும் அவர்கள் குடிக்கையில் உபசாரத்துக்குக் கூட அழைப்பதை தவிர்க்கத் தொடங்கி விட்டனர். சைட் டிஷ் மட்டும் அக்ஷயபாத்திரத்தில்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற அவஸ்தை.

குடிகாராள் என்னிடம் மாட்டிக்கொள்வது போய் நான் அவர்களிடம் மாட்டிக்கொண்டு தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிவந்ததை, கவிராஜன், சரண்கே மற்றும் ரோஸாவசந்த் ஆகியோர் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை என்பது எவ்வளவு பெருந்தன்மையான விஷயம்? 

கொடுமை டாஸ்மாக்கில் குடிப்பது. 

கொடுமையிலும் கொடுமை, பறிமாறியோன், குடிமுடிந்து குடிகாரர்கள் கழுத்தைப் பிடித்து கெஞ்சிக் கொஞ்சி நெட்டிக்கொண்டிருக்கையில் போய் சேர்ந்து மேசையில் சிந்திச் சீரழிந்த கடலை சுண்டல் வகையறாக்களை வயிறெறியப் பார்ப்பது. 

அதனினும் கொடுமை விடியற்காலை 2 1/2 மணியாகியும் - மறுநாள் ஆஃபீஸ் போகவேண்டி இருந்தும்கூட குடிகார கோஷ்டியிடம் குத்துயிர் கொலையுயிராய் பிணைக் கைதி போல அகப்பட்டுக் கொண்டிருப்பது.

இந்தக் கொடுமைக்கு ஜெயமோகனின் கலைஇலக்கிய கான்ஸண்ட்ரேஷன் கேம்ப் எவ்வளவோ மேலாக இருக்கக்கூடும். அட்லீஸ்ட் ஆத்மாவிற்காவது கலாய் பூசப்பட்டு இரண்டொரு நாளைக்கு இறுமாந்து திரியலாம்.