05 July 2011

அருளக்கிடைத்த பொருள்

காலைக் கடனாய் அலங்கரித்து
அசுவாரசியமாய்
படியில் அமர்ந்திருந்த
நடைபாதைக் கோவிலின் குருக்கள்
பல்லில் இருந்த சொத்தையின் 
வலியைக் குறைக்க
அனிச்சையாய்க்
கன்னத்துச் சதையை 
இழுத்துவிட்டுக் கொண்டிருக்க
கேட்டுப் போகிற இடத்தில் 
கைமாற்று கிடைக்கவும்
ஒப்பந்தம் கையெழுத்தாகவும்
போகிற அவசரத்தில்
கையெடுத்துக் கும்பிட்டுக் 
கடந்து கொண்டு இருந்தவர்களை
வெறித்துக் கொண்டிருந்த
அர்ச்சனைத் தட்டைப் பார்த்து
சிலையில் பூத்தது 
சிறிய புன்னகை.